சேதமான குடிநீர் குழாய் பெண்களே சரிசெய்தனர்
திருப்பூர்; திருப்பூர் மாநகராட்சி 50வது வார்டு குமாரசாமி காலனியில் ஏராளமான வீடுகள் உள்ளன. இப்பகுதிக்கு ஆழ்குழாய் கிணற்று மோட்டார் மூலம் தண்ணீர் சப்ளையாகிறது. இதில் 4வது வீதியில் உள்ள இணைப்பில் அப்பகுதியைச் சேர்ந்தோர் தண்ணீர் பிடித்துப் பயன்படுத்தி வருகின்றனர். சில நாட்கள் முன், பொதுக்குழாய் லேசாக சேதமடைந்து தண்ணீர் கசிந்து வெளியேறியது. இது குறித்து பொதுமக்கள் வார்டு கவுன்சிலருக்கு தகவல் அளித்தனர். நாள்கணக்காகியும் சேதமான குழாய் சரி செய்யப்படவில்லை. இந்நிலையில் அந்தக் குழாய் நேற்று முழுமையாக பெயர்ந்து விழுந்தது. அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் அவர்களாகவே அதை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். குழாய் இணைப்பு இருந்த இடத்தில் குழி தோண்டி, பெயர்ந்த குழாயைப் பொருத்தி, குச்சியில் கட்டி வைத்து குடிநீர் வீணாவை நிறுத்தியுள்ளனர்.