நாய் கடிக்கு சிகிச்சை பெறவில்லை;தொழிலாளி உயிரை குடித்த ரேபிஸ்
அவிநாசி; சேவூரில் தெரு நாய்க்கடிக்கு உரிய சிகிச்சை எடுக்காததால் கூலித்தொழிலாளி பரிதாபமாக பலியானார்.அவிநாசி ஒன்றியம், சேவூர் - தேவேந்திரன் நகர் பகுதியில் வசிப்பவர் லட்சுமணன் மகன் அற்புதராஜ், 42. கூலித் தொழிலாளரான அற்புதராஜ், கடந்த இரண்டு மாதங்கள் முன்பு வேலைக்குச் சென்று திரும்பும் போது, சேவூர் ரவுண்டானா பகுதியில் சுற்றித் திரிந்த தெரு நாய் ஒன்று கடித்துள்ளது.நாய் கடித்ததை வீட்டில் யாரிடமும் சொல்லாமலும், சிகிச்சை எடுக்காமலும் வழக்கம் போல கூலி வேலைக்குச் சென்று வந்துள்ளார். அப்போது உடல் நலனில் எந்தவித பாதிப்பும் இல்லாததால் யாருக்கும் நாய் கடித்த விவரம் தெரியவில்லை. இந்நிலையில் கடந்த வாரம் திடீரென அற்புதராஜுக்கு உடல் நிலை மோசமானது.அற்புதராஜை, அவரது உறவினர்கள், சேவூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் நாய் கடித்து இரண்டு மாதங்களுக்கு மேல் சிகிச்சை பெறாமல் இருந்ததால் அற்புதராஜூக்கு ரேபிஸ் நோய் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி உடனடியாக கோவை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். மருத்துவர்கள் அறிவுறுத்தலின் பேரில் அற்புதராஜின் உறவினர்கள் மற்றும் அருகில் வசிப்பவர்கள் அனைவருக்கும் கோவை அரசு மருத்துவமனையில் உரிய தடுப்பூசி செலுத்தப்பட்டது.