உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மண் மூடிய பாசன கால்வாய்களை துார்வார பணியாளர்கள் தேவை! ஊரக வளர்ச்சித்துறைக்கு கருத்துரு சமர்ப்பிப்பு

மண் மூடிய பாசன கால்வாய்களை துார்வார பணியாளர்கள் தேவை! ஊரக வளர்ச்சித்துறைக்கு கருத்துரு சமர்ப்பிப்பு

உடுமலை : பி.ஏ.பி., நான்காம் மண்டல பாசனத்துக்குரிய, பகிர்மான கால்வாய்களை தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்களை கொண்டு, துார்வார பாசன சபையினர் பொதுப்பணித்துறைக்கு மனு கொடுத்துள்ளனர். இது குறித்த கருத்துருவும், ஊரக வளர்ச்சித்துறைக்கு அனுப்பப்பட்டு வருகிறது.பி.ஏ.பி., நான்காம் மண்டல பாசனத்தில், கோவை, திருப்பூர் மாவட்டத்தில், 94,068 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற உள்ளது. திருமூர்த்தி அணையிலிருந்து மண்டல பாசன நிலங்களுக்கு சுழற்சி முறையில், தண்ணீர் திறக்கும் போது, இரண்டு ஆண்டுகள் இடைவெளி ஏற்படுகிறது.பி.ஏ.பி., பாசனத்தில், பிரதான, கிளை கால்வாயிலிருந்து, பகிர்மான கால்வாய்களுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. விளைநிலங்களுக்கு பாசன நீர் கொண்டு செல்லும், பகிர்மான கால்வாய்களே, சாகுபடிக்கான ஆதாரமாக உள்ளது.ஆனால், இக்கால்வாய்கள் அனைத்தும், பாசன திட்டம் பயன்பாட்டுக்கு வந்தது முதல் மேம்படுத்தப்படாமல் உள்ளது.மண் கரையுடன் கூடிய இக்கால்வாய்களில், தண்ணீர் செல்ல, இரண்டு ஆண்டுகள் இடைவெளி ஏற்படுகிறது. எனவே, இந்த இடைவெளி காலத்தில், கால்வாய் முழுவதும், மண் மூடி, புதர் மண்டி காணாமல் போய் விடுகிறது.

விவசாயிகள் திணறல்

பாசனத்துக்கு தண்ணீர் திறக்கும் முன், குறுகிய காலத்தில், துார்வார முடியாமல், விவசாயிகள் திணறுகின்றனர்; நீர் விரயமும் அதிகரித்து, சாகுபடிக்கு போதுமான தண்ணீர் கிடைப்பதில்லை.பல்வேறு காரணங்களால், பாசன சுற்றுகள் குறைக்கப்பட்டுள்ள நிலையில், நீர் விரயத்தால், அதிக பாதிப்பு ஏற்படுகிறது.பிரதான மற்றும் கிளை கால்வாய் பொதுப்பணித்துறை வாயிலாகவும், பகிர்மான கால்வாய்கள், சம்பந்தப்பட்ட பாசன சபையினராலும், பராமரிக்கப்படுகிறது.இதில், பராமரிப்பு மற்றும் இதர பணிகளுக்காக, கிராம நீரினை பயன்படுத்துவோர் சங்கம் எனப்படும் பாசன சபையினருக்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்வதில்லை.இதனால், விவசாயிகளிடம் இருந்து பங்களிப்பு தொகை பெற்றே, அனைத்து பராமரிப்பு பணிகளையும் மேற்கொள்ள வேண்டிய நிலை உள்ளது.இப்பிரச்னைக்கு தற்காலிக தீர்வாக, 'தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், பகிர்மான கால்வாய்களில், புதர்களை அகற்றி, துார்வார வேண்டும்; மண்டல பாசன காலம் துவங்கும் முன், பாசன சபைகளிடமிருந்து, கருத்துரு பெற்று, ஒன்றிய நிர்வாகங்கள் வாயிலாக பணியானை விடுவிக்க வேண்டும்,' என பாசன சபையினர் பொதுப்பணித்துறைக்கு மனு அளித்து வருகின்றனர்.

கருத்துரு அனுப்பி வைப்பு

இந்த மனுக்கள் அடிப்படையில், துார்வார வேண்டிய கால்வாயின் விபரங்களை பெற்று, தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்களை ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தி, ஊரக வளர்ச்சித்துறைக்கு, பொதுப்பணித்துறையினர் கருத்துரு அனுப்பி வருகின்றனர்.இந்த நடைமுறையால், தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட பணியாளர்களை கொண்டு, பகிர்மான கால்வாய்களை துார்வார முடியும். விவசாயிகள், தொழிலாளர்கள் என இரு தரப்பினரும் பயன்பெறுவார்கள்.சில மாதங்களில், நான்காம் மண்டல பாசன காலம் துவங்க உள்ள நிலையில், உடனடியாக விவசாயிகள் கோரிக்கை அடிப்படையில், பணிகளை துவக்க, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பி.ஏ.பி., ஆயக்கட்டு விவசாயிகளும் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை