மஹாதீப நாளில் மலை ஏற தடை; திருவண்ணாமலையில் மண் சரிவு எதிரொலி
திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டத்தில், 'பெஞ்சல்' புயலால் கடந்த 1 மற்றும் 2ம் தேதி கனமழை பெய்ததில், திருவண்ணாமலை அண்ணாமலையார் மலை மீது, மூன்று இடங்களில் சிறு அளவிலான மண் சரிவும், மூன்று இடங்களில் பெரிய அளவிலான மண் சரிவும் ஏற்பட்டது. மண்ணின் தரம் ஆய்வு
இதில், மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில், ஐந்து இடங்களில் மண் சரிவு ஏற்பட்டதில், பெரிய அளவில் பாதிப்பில்லை. வ.உ.சி., நகரில் ஏற்பட்டதில், ஏழு பேர் பலியாகினர். மலையில் மண்ணின் தரம் குறித்து, ஓய்வுபெற்ற ஐ.ஐ.டி., பேராசிரியர்கள் குழு ஆய்வு செய்துள்ளது.அவர்கள் ஆய்வு நடத்தியபோது, மேலும் மழை பெய்தால், மண் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர். பெய்த மழையால் மலையில் ஆங்காங்கே நீர் தேங்கியும், மண் இளகிய தன்மையுடனும் உள்ளது. பாறைகளில் பாசி பிடித்துள்ளது. இதனால், லேசான மழை பெய்தாலே, மண் சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது.வரும் 13ல், 2,668 அடி உயர மலை உச்சியில் மஹா தீபம் ஏற்றப்பட உள்ளது. மஹா தீபத்தை காண, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் எவ்வித கட்டுப்பாடும் இன்றி ஏராளமானோர் அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் பாதுகாப்பு கருதி கடந்த ஐந்தாண்டுகளாக 2,500 பேர் மட்டும் மாவட்ட நிர்வாகம் அனுமதித்து வருகிறது. தற்போது மண் சரிவில் சிக்கி, ஏழு பேர் பலியான அதிர்ச்சியிலிருந்து மாவட்ட நிர்வாகம் மீண்டு வரும் நிலையில், பக்தர்கள் மலை ஏற தடை விதிக்க ஆலோசித்து வருகிறது. 50 பேர் மட்டும்
வனத்துறையினரும், மண் ஈரத்தன்மையுடன் உள்ளதால், பக்தர்களை மலை ஏற அனுமதிப்பதில் தயக்கம் காட்டியுள்ளனர். போலீசாரும், பாதுகாப்பு தருவதில் சிரமம் உள்ளதாக கருதுகின்றனர். இதனால், இந்தாண்டு மலை மீது ஏற, மாவட்ட நிர்வாகம் அனுமதிக்க வாய்ப்பில்லை.இந்நிலையில், மலைஉச்சியில் மஹா தீபம் ஏற்றும் கட்டளைதாரர்களில், 50 பேரை மட்டும் அனுமதிக்க வாய்ப்புள்ளது. இதனால், மலை ஏறி மஹா தீபம் காண, மாலை அணிந்து விரதமிருந்து வரும் பக்தர்கள், ஏமாற்றமடையும் நிலை ஏற்பட்டு உள்ளது.