திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மே மாதம் வரை, பவுர்ணமி நாட்கள் தவிர மற்ற நாட்களில், ஒரு மணி முதல் இரண்டு மணி நேரத்தில் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.இதற்கு வசதியாக, வடக்கு அம்மணி அம்மன் கோபுரம், கிழக்கு ராஜகோபுரம், தெற்கு திருமஞ்சன கோபுரம் வழியாக அனுமதிக்கப்பட்டு, மேற்கு கோபுரம் வழியாக வெளியேற அனுமதிக்கப்பட்டனர். இதனால் எளிதாக, விரை வாக தரிசனம் செய்தனர்.ஆனால், ஜூனில் தி.மு.க., நகராட்சி முன்னாள் தலைவர் ஸ்ரீதரின் அண்ணன் ஜீவானந்தம் தலைமையில் அறங்காவலர் குழு நியமிக்கப்பட்டது.அன்று முதல் வி.ஐ.பி.,க்களுக்கு அம்மணி அம்மன் கோபுரம் வழியாகவும், மற்ற அனைவரும் ராஜகோபுரம் வழியாகவும் அனுமதிக்கப்பட்டனர். இதனால் செயற்கையாக நெரிசல் ஏற்பட்டது. மேலும், சுவாமி, அம்மன் சன்னிதியில் விரைந்து தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்காததால், நான்கு முதல் ஆறு மணி நேரம் காத்திருக்கும் நிலை உருவானது.கடந்த மாதம், 27ம் தேதி தி.மு.க., பிரமுகர் ஸ்ரீதரன், குடும்ப உறுப்பினர், அம்மன் சன்னிதியில் சுவாமி தரிசனம் செய்த போது, பக்தர்களுக்கு மறைக்காமல் தரிசனம் செய்யுமாறு கூறிய, இன்ஸ்பெக்டர் காந்திமதி தாக்கப்பட்டார்.இந்த சம்பவம் நகர மக்களிடையே தி.மு.க., மீது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதை கண்டித்து ஹிந்து முன்னணி, பா.ஜ.,வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.இதன் எதிரொலியாக நேற்று முன்தினம் மாலை, அறங்காவலர் குழு அவசர கூட்டம் கூட்டப்பட்டது. கோவில் இணை ஆணையர் ஜோதி, அறங்காவலர்கள் பங்கேற்றனர்.கோவில் கருவறை முன் அமர்வு தரிசனம் ரத்து செய்யப்படுகிறது. அபிஷேகதாரர் மட்டும் அனுமதிக்கப்படுவர் என, தீர்மானம் நிறைவேற்றினர். இதன்படி, கோவிலில் நேற்று முதல் வி.ஐ.பி., அமர்வு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
பா.ஜ., கண்டன ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் அறங்காவல் குழு தலைவர் ஜீவானந்தம். இவரது தம்பி ஸ்ரீதரன்; தி.மு.க.,வை சேர்ந்த திருவண்ணாமலை நகராட்சி முன்னாள் தலைவர், மாநில செயற்குழு உறுப்பினராக உள்ளார். இவரது குடும்பத்தை சேர்ந்த சிவசங்கரி, கடந்த, 27ம் தேதி அருணாசலேஸ்வரர் கோவிலில், உண்ணாமுலையம்மன் சன்னிதியில் தரிசனம் செய்த போது, பாதுகாப்பு பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் காந்திமதி, மற்ற பக்தர்களுக்கு மறைக்காமல் சுவாமி கும்பிடுமாறு, சிவசங்கரியிடம் கூறினார். அப்போது ஆத்திரமடைந்த ஸ்ரீதரன் காந்திமதியை பக்தர்கள் முன்னிலையில் கன்னத்தில் அறைந்தார். டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உத்தரவின்படி, ஸ்ரீதரன், சிவசங்கரி, கோவில் ஊழியர் ரமேஷ் ஆகியோர் மீது திருவண்ணாமலை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், இவர்கள் தலைமறைவாகிவிட்டனர். மூவரையும் கைது செய்யக்கோரி நேற்று, பா.ஜ., சார்பில், தெற்கு மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.