| ADDED : ஜூலை 26, 2024 08:39 PM
திருச்சி:தமிழ்நாடு ரோல் பால் அசோசியேஷன் சார்பில், 11வது மாநில அளவிலான சப்-ஜூனியர் ரோல்பால் சாம்பியன்ஷிப் போட்டிகள், திருச்சி, சாய்ஜி ரோல்பால் அகாடமி மைதானத்தில் துவங்கின. தென்னிந்திய ரோல்வால் சங்க செயலர் சுப்ரமணியம் தலைமையில், தொழிலதிபர் சிவசண்முகம் போட்டிகளை துவக்கி வைத்தார். தொடர்ந்து, மூன்று நாட்கள் நடைபெறும் போட்டியில் திருச்சி, சென்னை, நாகை, கோயம்புத்துார், வேலுார், திருவண்ணாமலை உட்பட, தமிழகத்தின் 30 மாவட்டங்களைச் சேர்ந்த அணிகள் பங்கேற்கின்றன. இது குறித்து, தமிழ்நாடு ரோல் பால் அசோசியேஷன் துணைத் தலைவர் பிரேம்நாத் கூறியதாவது:ஆடவர் மற்றும் மகளிருக்கு தனித்தனியே போட்டிகள் நடைபெறுகின்றன. கால் இறுதி சுற்றுகள் அனைத்தும் லீக் முறையிலும், அரை இறுதி போட்டிகள் நாக்அவுட் முறையிலும் நடத்தப்படுகின்றன. போட்டியில் சிறப்பாக விளையாடும் வீரர், வீராங்கனையர் செப்டம்பரில் மஹாராஷ்டிரா மாநிலம், புனேவில் நடைபெறும் அகில இந்திய அளவிலான ரோல் பால் சாம்பியன்ஷிப் போட்டியில், தமிழகம் சார்பில் பங்கேற்று விளையாடுவர்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.