உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / காரின் "டிக்கி, "சீட்களுக்கு அடியில் சோதிக்க வேண்டும்: பார்வையாளர்

காரின் "டிக்கி, "சீட்களுக்கு அடியில் சோதிக்க வேண்டும்: பார்வையாளர்

திருச்சி: ''கார் டிக்கி, சீட்டின் அடிப்பகுதிகளில் போலீஸார் சோதனையிட வேண்டும்,'' என தேர்தல் செலவினப் பார்வையாளர் நிவேதிதா பிஸ்வாஸ் தெரிவித்தார். திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தல் செலவினங்கள் குறித்து ஆய்வுக் கூட்டம் தேர்தல் செலவினப் பார்வையாளர் நிவேதிதா பிஸ்வாஸ் தலைமையில் நேற்று நடந்தது. மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான ஜெயஸ்ரீமுரளிதரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் செலவினப் பார்வையாளர் நிவேதிதா பிஸ்வாஸ் பேசியதாவது: தேர்தலில் அரசியல் கட்சியினர் மற்றும் சுயேச்சை வேட்பாளர்களின் செலவினங்களை விழிப்புடன் கண்காணிக்க வேண்டும். சோதனை சாவடிகளில் உள்ள போலீஸார், வாகனங்களில் டிக்கி, சீட்டின் அடிப்பகுதி போன்ற இடங்களில் முறையாக சோதனை செய்ய வேண்டும். பறிமுதல் செய்யப்படும் பணம், நகை மற்றும் இதரப் பொருட்கள் அரசியல் கட்சியினர் மற்றம் தனிநபரின் உடமையாக இருக்கலாம். இதுபற்றி தேர்தல் பார்வையாளர் தான் முடிவு செய்ய வேண்டும். தேர்தல் நடத்தை விதிமீறல் பற்றி போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலிருந்து வரும் தினசரி நடவடிக்கையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் பற்றிய விவரம் மட்டும் தான் உள்ளது. அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் பற்றியும் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். தேர்தல் தொடர்பாக போலீஸ் துறை மூலம் எத்தனை வழக்குகள் பதியப்பட்டுள்ளன என தகவல் தெரிவிக்கப்பட வேண்டும். கட்சி கொடிகளுடன் செல்லும் வாகனங்களை கண்காணித்து சம்பந்தப்பட்ட கட்சியினர் செலவின தொகையில் சேர்க்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் போலீஸ் டி.சி., (சட்டம்-ஒழுங்கு) ஜெயபாண்டியன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) செல்வராணி, இடைத்தேர்தல் ஒருங்கிணைப்பு அலுவலர்கள் கருப்பையா, தேர்தல் தாசில்தார் நாகநாதன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை