குவாரி குட்டையில் மூழ்கி தாய், மகள் பரிதாப பலி
துவரங்குறிச்சி : திருச்சி அருகே கல்குவாரி குட்டையில் குளிக்கச் சென்ற தாய், மகள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்.திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி அருகே யாகபுரம் சமத்துவபுரத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன்; மர ஆசாரி. இவரது மனைவி உலகாயி, 35. இவர் விராலிமலையில், ஐ.டி.சி., பிஸ்கட் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவர்களின் மகள் ஜெயஸ்ரீ, 11. நேற்று முன்தினம் மாலை, உலகாயி, ஜெயஸ்ரீயுடன், வீட்டின் அருகே உள்ள குவாரி குட்டையில் குளிக்கச் சென்றுள்ளார். அப்போது, இருவரும் எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கி இறந்தனர்.துவரங்குறிச்சி போலீசார், இருவர் உடல்களை மீட்டு, மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரிக்கின்றனர்.