திருச்சி: திருச்சியைச் சேர்ந்த பிரபல ரவுடி துரைசாமி, 20 நாட்களுக்கு முன், என்கவுன்டரில் கொல்லப்பட்டார்.துரைசாமியின் ஆதரவாளர்கள், 'இன்ஸ்டாகிராம்' பக்கத்தில், 'எம்.ஜி.ஆர்., நகர்' என்ற பெயரில் முகவரி உருவாக்கினர். அதில், திருச்சி எஸ்.பி., வருண்குமாரின் படத்தை பதிவிட்டு, 'திருச்சியில் சிந்தித்து பார்க்க முடியாத அளவுக்கு தலைகள் சிதறும்' என, பதிவிட்டிருந்தனர்.போலீசார் விசாரணை நடத்தியதில், அந்த பதிவை, திருச்சி, புத்துார் எம்.ஜி.ஆர்., நகரைச் சேர்ந்த ராஜ-பாண்டி, 24, பதிவேற்றம் செய்தது தெரிய வந்தது. அவரை பிடிக்க, சோமரசம்பேட்டை போலீசார் சென்றபோது, கையில் வைத்திருந்த பட்டா கத்தியால் போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அவரை கைது செய்த போலீசார், நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். ஏற்கனவே, கொம்பன் ஜெகன் என்ற ரவுடி என்கவுன்டரில் கொல்லப்பட்ட போதும், திருச்சி எஸ்.பி., வருண்குமாருக்கு இதேபோன்று கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.