| ADDED : ஆக 17, 2011 02:18 AM
திருச்சி: திருச்சியில் தூங்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் பெண் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி உறையூர் தெற்கு வண்டிக்காரத் தெருவைச் சேர்ந்தவர் சதானந்தம் (30). இவர் கூட்டுறவு வங்கியில் அலுவலராக பணியாற்றி வருகிறார். இவருக்கும், தஞ்சை கரந்தை பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகள் இலக்கியாவுக்கும் (24) கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 11 மாத ஆண்குழந்தை உள்ளது. கணவன் சதானந்தத்துக்கும், இலக்கியாவுக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு ஏற்படும் போதெல்லாம் இலக்கியா கோபித்துக் கொண்டு தனது பெற்றோர் வீட்டுக்குச் செல்வதும், அதன்பின் சமாதானம் அடைந்த கணவர் வீட்டுக்கு வருவதுமாக இருந்துள்ளார். கடந்த இரண்டு நாட்களாக கணவன், மனைவி இடையே வழக்கம் போல் சண்டை நடந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இலக்கியா தனது கணவர் வீட்டில் தூக்கில் தொங்கியுள்ளார். இதைக்கண்ட அக்கம்பக்கத்தார் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்த இலக்கியா பெற்றோர், உறவினர்களுடன் திருச்சி வந்தனர். அவர்கள், 'தன்னுடைய மகளை கணவனும், அவரது குடும்பத்தாரும் அடித்துக் கொலை செய்திருக்கலாம்' என்று ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீஸில் புகார் அளித்தனர். இதையடுத்து இலக்கியா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் விவகாரத்தை, அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாமா? என்ற கோணத்தில் போலீஸார் விசாரிக்க துவங்கியுள்ளனர்.திருமணமாகி இரண்டு ஆண்டே ஆவதால், இலக்கியாவின் மரணம் வரதட்சணை கொடுமையால் நடந்ததா? என்பது குறித்து ஆர்.டி.ஓ., சங்கீதாவும் விசாரணை மேற்கொண்டார்.