| ADDED : ஆக 17, 2011 02:19 AM
திருச்சி: திருச்சி துவாக்குடி அருகிலுள்ள வாழவந்தான் கோட்டையில் இந்தியன்
ஆயில் கார்ப்பரேஷனுக்கு (ஐ.ஓ.சி.,) சொந்தமான குடோவுன் உள்ளது. இங்கிருந்து
தான் திருச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு பெட்ரோல் மற்றும் டீஸல்
டேங்கர் லாரிகளில் பெட்ரோல் பங்க்குகளுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.
வாழவந்தான்கோட்டையிலிருந்து, ஐ.ஓ.சி., குடோவுனுக்கு செல்லும் பாதை மிகவும்
மோசமாக இருந்துள்ளது. அதை சரிசெய்ய டேங்கர் லாரி டிரைவர்கள் பல மாதங்களாக
கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் ஐ.ஓ.சி., நிர்வாகம்
கண்டுகொள்ளவில்லை. இப்படிப்பட்ட சூழலில் நேற்று காலை ஆறுமணிக்கு
குடோவுனுக்கு டீஸல் ஏற்ற வந்த டேங்கர் லாரி டிரைவர்கள், பாதையை சரிசெய்ய
வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 150க்கும் மேற்பட்ட லாரிகள்
குடோவுன் முன் நிறுத்தப்பட்டது. டிரைவர்களின் போராட்டம் குறித்து
கேள்விப்பட்ட ஐ.ஓ.சி., அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ஒரு
மாதத்தில் பாதையை சீர்செய்வதாக உறுதியளிக்கப்பட்டதால், டிரைவர்கள்
போராட்டத்தை கைவிட்டனர். காலை ஆறு மணிக்கு துவங்கிய டேங்கர் லாரி
டிரைவர்களின் போராட்டம் 11 மணி வரை தொடர்ந்தது. இதனால் வெளியூர்களுக்கும்,
திருச்சிக்கும் பெட்ரோல், டீஸல் கொண்டு செல்வதில் காலதாமதம் ஏற்பட்டது.