உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / பாலிடெக்னிக் கல்லூரி ஹாஸ்டல் கூரையை பிரித்து பணம் கொள்ளை

பாலிடெக்னிக் கல்லூரி ஹாஸ்டல் கூரையை பிரித்து பணம் கொள்ளை

திருச்சி: திருச்சி அருகே அரசு பெண்கள் பாலிடெக்னிக் கல்லூரி விடுதியில் ஆஸ்பெட்டாஸ் கூரையை பிரித்து பணம், ஏ.டி.எம்., கார்டுகளை கொள்ளை அடித்துச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர். திருச்சி துவாக்குடி அண்ணாவளைவு அருகே தமிழக அரசால் நடத்தப்படும் பெண்கள் பாலிடெக்னிக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. கல்லூரி வளாகத்திலேயே மாணவியர் தங்கும் விடுதியும் உள்ளது. சனி, ஞாயிறு, திங்கள் மூன்று நாட்கள் விடுமுறை என்பதால் பெரும்பலான மாணவியர் கல்லூரி விடுதியிலிருந்து தங்களின் சொந்த ஊர்களுக்கு சென்றுவிட்டனர். இதனால் விடுதியில் எட்டு முதல் 11ம் எண் வரையிலான நான்கு அறைகள் பூட்டப்பட்டிருந்தது. விடுதி 12ம் எண் அறையில் நாகையைச் சேர்ந்த சசிப்ரியா (18), ஆண்டிப்பட்டியைச் சேர்ந்த நாகலட்சுமி (23) ஆகிய இரு மாணவியர் மட்டும் ஊருக்கு செல்லாமல் தங்கியிருந்தனர். தனியாக படுக்க பயமாக இருந்ததால் இரு மாணவியரும் வேறு அறையில் தங்களின் தோழிகளுடன் படுத்து உறங்கியுள்ளனர். நேற்று காலை தங்களின் அறைக்கு வந்து பார்த்தபோது, அறையின் ஆஸ்பெட்டாஸ் கூரையை பிரித்து, அறையில் வைக்கப்பட்டிருந்த 2,200 ரூபாய் பணம் மற்றும் ஏ.டி.எம்., கார்டு கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது. அதேபோல், மாணவியர் ஊருக்கு சென்றதால் பூட்டி வைக்கப்பட்டிருந்த நான்கு அறைகளிலும் ஆஸ்பெட்டாஸ் கூரையை பிரித்து உள்ளே இறங்கி மர்ம நபர்கள் தங்களின் கைவரிசையை காட்டியுள்ளனர். அந்த அறைகளில் எவ்வளவு பணம் திருடப்பட்டது என்பது உடனடியாக தெரியவில்லை. அரசு பெண்கள் பாலிடெக்னிக் கல்லூரி விடுதி நிர்வாகம் கொடுத்த புகாரின்பேரில், ஆஸ்பெட்டாஸ் கூரையை பிரித்து பணத்தை திருடிய மர்ம நபர்களை துவாக்குடி போலீஸார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை