| ADDED : செப் 03, 2011 12:29 AM
மணப்பாறை: மணப்பாறை பகுதியில் தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வரும் டவுசர் கொள்ளையர்களை கண்டுபிடிக்க முடியாமல் திணறி வரும் நிலையில் போலீஸாருக்கு சவால் விடும் வகையில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதியவரை கட்டிப்போட்டு 25 ஆயிரம் பணத்தை திருடிச் சென்றுள்ளனர். மணப்பாறை பகுதியில் கடந்த 25ம் தேதி முதல் ஒரு வாரத்தில் தொடர்ந்து நடந்த ஐந்து சம்பவங்களில் இதுவரை 40 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. இரவில் நடந்த மூன்று சம்பவங்களிலும் டவுசர் கொள்ளையர்களே கைவரிசை காட்டியுள்ளனர். எந்த தடயமும் துப்பு துலங்காமல் உள்ளதால் போலீஸார் திணறி வருகின்றனர்.
நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவில் மேலமஞ்சம்பட்டியில் சந்தியாகு(60) என்பவர் தனது குடும்பத்தினர் வேளாங்கண்ணி சென்றதால் வீட்டை பூட்டிவிட்டு வீட்டின் வெளியே கட்டிலில் தூங்கியுள்ளார். அப்போது அவரது வீட்டுக்குச் சென்ற டவுசர் கொள்ளையர்கள் அவரை கட்டிப் போட்டுவிட்டு வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த 25 ஆயிரம் ரூபாயை திருடிச்சென்றனர். அதன்பின், அருகிலுள்ள ம.தி.மு.க., மாவட்ட துணைச் செயலாளர் தாமஸ் தங்கமணி வீட்டுக்குச் சென்று கதவை உடைத்துள்ளனர். சத்தம் கேட்டு தாமஸ் தங்கமணி குடும்பத்தினர் வெளியில் வரவே கொள்ளையர்கள் ஓடிவிட்டனர்.
மணப்பாறை போலீஸார் வழக்கம்போல மோப்ப நாய், கை ரேகை, தடயவியல் நிபுணர்களை வரவழைத்து ஆய்வு செய்தனர். சந்தியாகு வீட்டில் கிடந்த கொள்ளையர்கள் பயன்படுத்திய இரும்புகம்பி, செருப்பு ஆகியவற்றை பறிமுதல் செய்து எடுத்துச்சென்றனர். இன்ஸ்பெக்டர் விஜயகாண்டீபன் வழக்குப்பதிந்து விசாரணை செய்கிறார். நாள்தோறும் நடக்கும் திருட்டுகளால் மணப்பாறை மக்கள் பீதியடைந்துள்ளனர்.