| ADDED : செப் 20, 2011 11:41 PM
திருச்சி: திருச்சி மாநகராட்சியில் ஆடு, மாடுகள் உட்பட கால்நடைகளை மாநகராட்சி ஊழியர்கள் 19ம் தேதி முதல் பிடித்து அபராதம் விதிக்கின்றனர். திருச் சி மாநகராட்சி முழுவதும் முதல் நாள் சுற்றித்திரிந்த 147 ஆடு, ஐந்து மாடு பிடிக்கப்பட்டது. மாநகராட்சியிலுள்ள அனைத்து வார்டுகளிலும் பாரபட்சமின்றி மாநகராட்சி ஊழியர்கள் கால்நடைகளை பிடித்து வருகின்றனர். முதல் நாள் பல்வேறு வார்டுகளில் பிடிக்கப்பட்ட கால்நடைகளுடன் 24வது வார்டு பகுதிக்கும் மாநகராட்சி ஊழியர்கள் சென்றனர். அப்பகுதியில் சுற்றித்திரிந்த கால்நடைகளை பிடிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்ட போது அப்பகுதியை சேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
'பிடிபட்ட கால்நடைகளை இறக்கி விட வேண்டும்' என கூறி கால்நடைகளை ஏற்றி இருந்த வாகனத்தை மேலும் செல்ல விடாமல் தடுத்தனர். இதனால், மாநகராட்சி ஊழியர்களுக்கும் பொது மக்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. 'இப்பகுதி வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர் சீனிவாசனுக்கு தகவல் சொல்லி உள்ளோம். அவர் வந்த பின், இங்கிருந்து வாகனத்துடன் செல்லலாம்' என கால்நடை உரிமையாளர்கள் கூறினர். இச்சம்பவம் குறித்து உதவி கமிஷனர், போலீஸில் புகார் செய்தார். சிறிது நேரத்தில் சம்பவ இடத்திற்கு வந்த வார்டு கவுன்சிலர் சீனிவாசன், மாநகராட்சி ஊழியர்களிடம் தனது வார்டில் பிடிபட்ட ஆடுகளை விடுவிக்குமாறு சொன்னார். அதற்கு மாநகராட்சி ஊழியர்கள் மறுத்து விட்டனர். அப்போது போலீஸார் சம்பவ இடம் வந்தனர். இதையறிந்த வார்டு கவுன்சிலர் சீனிவாசன் இப்பிரச்னையிலிருந்து விலகிச் சென்று விட்டார். கால்நடைகள் வாகனம் போலீஸ் பாதுகாப்புடன் சென்றது. வார்டு கவுன்சிலர் சீனிவாசன் கூறுகையில், ''எங்கள் பகுதியில் ஆடுகளை பிடித்துள்ளதை அறிந்து அங்கு சென்றேன். மொத்தம் ஏழு ஆடு பிடிபட்டிருந்தது. அதில், இரண்டு ஆடுகளை விட்டு விடுங்கள் என்றேன். அவ்வளவு தான். நான் தகராறு ஏதும் செய்ய வில்லை. மாற்று கட்சியை சேர்ந்தவர்கள் என் மீது தவறான தகவலை பரப்பி விட்டுள்ளனர்,'' என்றார்.