உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / 2 ஆண்டில் 300 லிட்டர் தாய்ப்பால் தானம் திருச்சி பெண்ணின் சேவை சாதனையாக பதிவு

2 ஆண்டில் 300 லிட்டர் தாய்ப்பால் தானம் திருச்சி பெண்ணின் சேவை சாதனையாக பதிவு

திருச்சி:தாய்ப்பால் கிடைக்காமல் தவிக்கும் குழந்தைகளுக்காக, 300 லிட்டர் தாய்ப்பால் தானம் செய்த பெண்ணுக்கு, பதக்கங்களுடன் பாராட்டு குவிந்து வருகிறது. தி ருச்சி, காட்டூர் அம்மன் நகரை சேர்ந்தவர் செல்வ பிருந்தா, 33; பொறியியல் பட்டதாரி. இவர், 2016ல், பிரவீன்குமார் என்பவரை திருமணம் செய்தார். தம்பதிக்கு பிரனீத், பிரணிகா என, இரு குழந்தைகள் உள்ளனர். செல்வ பிருந்தாவுக்கு குழந்தை பிறந்தவுடன், தேவைக்கு கூடுதலாக தாய்ப்பால் சுரந்தது. அப் போது, அரசு மருத்துவமனைகளில், குறை பிரசவத்தி ல் பிறந்த பல குழந்தைகள் தாய்ப்பால் கிடைக்காமல், உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சையில் இருப்பது அவருக்கு தெரிந்தது. அந்த குழந்தைகளின் பசியை போக்கி, உடல் நலத்தை காக்க, செல்வ பிருந்தா நினைத்தார். தன் குழந்தையின் தேவைக்கு அதிகமாக சுரந்த தாய்ப்பாலை, 'அமிர்தம் தாய்ப்பால் தானம்' என்ற அரசு சாரா தொண்டு நிறுவன துணையுடன், மற்ற குழந்தைகளுக்கு தானம் கொடுக்க தொடங்கினார். இரு ஆண்டுகளில், 300.17 லிட்டர் தாய்ப்பாலை தானம் கொடுத்துள்ளார். இதனால், அரசு பொது மருத்துவமனையில் தாய்ப்பாலுக்காக ஏங்கி தவித்த எண்ணற்ற குழந்தைகள் உயிர் பிழைத் துள்ளன. அவரது இந்த சேவையை அங்கீகரித்து, செல்வ பிருந்தாவை பாராட்டி, 'ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்' நிறுவனமும், 'இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்' நிறுவனமும் சான்று மற்றும் பதக்கம் வழங்கி கவுரவித்துள்ளன. செல்வ பிருந்தா கூறியதாவது: வீட்டில் இருந்தபடியே தாய்ப்பால் சேமித்து, தன்னார்வலர்கள் உதவியுடன் அரசு மருத்துவமனையில் சேர்த்தேன். மைக்ரோ பயாலஜி துறை டாக்டர்கள், தாய்ப்பாலை ஆய்வு செய்த பின், சிகிச்சையில் உள்ள குழந்தைகளுக்கு வழங்கினர். தாய்ப்பால் கிடைக்காமல் தவிக்கும் குழந்தைகளின் உயிரை காப்பாற்றுகிறோம் என்ற மகிழ்ச்சியில், கணவர், குடும்பத்தினரின் ஒத்துழைப்புடன் தாய்ப்பால் தானம் செய்தேன். இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை