தந்தை, மகன் கொலையில் இருவருக்கு இரட்டை ஆயுள்
திருச்சி:திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே இருங்களூரை சேர்ந்தவர் ரோக்குராஜ், 68. இவர், 20 ஆண்டுகளுக்கு முன், நிலத்தகராறில் அதே பகுதியை சேர்ந்த ஆரோக்கியசாமி என்பவரை வெட்டிக்கொலை செய்தார். இதில், ஆயுள் தண்டனை பெற்ற இவர், 2018ல் தண்டனை காலம் முடிந்து, சிறையில் இருந்து வெளியே வந்தார்.ஆரோக்கியசாமி கொலை செய்யப்பட்டதால் ஆத்திரத்தில் இருந்த அவரது மகன் ஜேசுராஜ், 61, பேரன் பிரின்ஸ் பெர்னாண்டஸ், 28, அவரது மனைவி ஞானசுந்தரி, 27 ஆகியோர் சேர்ந்து, 2020ல், ரோக்குராஜ், அவரது மகன் ஜான் டேவிட், 33, ஆகிய இருவரையும் கட்டையால் அடித்தும், கத்தியால் குத்தியும் கொலை செய்தனர்.சமயபுரம் போலீசார் வழக்கு பதிந்தனர். திருச்சி இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி கோபிநாதன் விசாரித்து, குற்றஞ்சாட்டப்பட்ட ஜேசுராஜ், பிரின்ஸ் பெர்னாண்டஸ் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், 2,000 ரூபாய் அபராதமும் விதித்தார். வழக்கில் தொடர்புடைய ஞானசுந்தரியை விடுவித்து உத்தரவிட்டார்.