விடுதியில் சிக்கிய கஞ்சா 7 மாணவர்களுக்கு கம்பி
காட்பாடி: விடுதியில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த பல்கலை மாணவர்கள் ஏழு பேர் கைது செய்யப்பட்டனர். வேலுார் மாவட்டம், பிரம்மபுரம், தனியார் விடுதிகளில், பிரபல தனியார் பல்கலை மாணவர்கள் தங்கி, கஞ்சா பொருட்களை பயன்படுத்துவதாக, எஸ்.பி.,க்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, தனியார் விடுதிகளில், நேற்று முன்தினம், போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, கிளவுட் அப்பார்ட்மென்ட், நேத்ரா குடியிருப்பு மாணவர்களிடம், 500 கிராம் கஞ்சா, 53 போதை மாத்திரைகள், 250 மி.லி., கஞ்சா ஆயிலை போலீசார் கைப்பற்றினர். இது தொடர்பாக, இறுதியாண்டு படிக்கும் உ.பி., மீரட்டை சேர்ந்த ஆயுஷ் சுக்லா, 21, காட்பாடியைச் சேர்ந்த ஆதித்ய பிரதான், 21, தேவ் சிங், 21, உட்பட ஏழு மாணவர்களை, பிரம்மபுரம் போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.