அரசு பஸ் மோதி இறந்தவரின் மனைவிக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு
வேலுார்; அரசு பஸ் மோதி உயிரிழந்த எலக்ட்ரீஷியன் மனைவிக்கு, 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. வேலுார், சைதாப்பேட்டையை சேர்ந்தவர் கோபி, 42; எலக்ட்ரீஷியன். இவர், 2023 ஆகஸ்ட்டில் சென்னை, நெற்குன்றம் அருகே தன் டூ - வீலரில் சென்றபோது, அவ்வழியாக சென்ற அரசு பஸ், கோபி டூ - வீலர் மீது மோதியது. இதில், கோபி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கணவரின் இறப்புக்கு இழப்பீடு வழங்க, கோபி மனைவி காஞ்சனா, வேலுார் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிபதி சாண்டிலியன், பேருந்தை அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் இயக்கியதே கோபியின் இறப்புக்கு காரணம் எனக்கூறி, மனுதாரருக்கு இழப்பீடாக, 25 லட்சம் ரூபாயை ஆண்டுக்கு, 7.5 சதவீத வட்டியுடன் தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகம் வழங்க உத்தரவிட்டார்.