| ADDED : ஜூலை 17, 2011 01:33 AM
விழுப்புரம் : விழுப்புரம் ஏழுமலை பாலிடெக்னிக் கல்லூரியில் 'டிப்ளமோ' சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது.கல்லூரி செயலர் செல்வமணி தலைமை தாங்கினார். நிர்வாக அலுவலர் கணேசன் வரவேற்றார். முதல்வர் ரகோத்தமன் துவக்கவுரையாற்றினார். விழாவில் திருச்சி பாரதிதாசன் பல்கலை.,முன்னாள் துணை வேந்தர் பொன்னவைக்கோ மாணவர்களுக்கு பட்டயச் சான்றிதழ்கள் வழங்கி பேசியதாவது: இங்கு பட்டயம் பெறும் மாணவர்களுக்கு இது ஒரு துவக்கமே தவிர முடிவல்ல. நல்ல வாழ்க்கைக்கு அடிப்படை தேவை பொருள். நல்ல பொருள் செல்வத்தை பெற ஒவ்வொருவருக்கும் அறிவும், ஆற்றலும் மிக முக்கிய தேவையாக உள்ளது.சிக்கலான நேரத்தில் ஒருவருக்கு கல்வி துணையாக உள்ளது.
மாணவர்கள் படிக்கும் ஒவ்வொரு பாடத்திலிருந்தும் அடிப்படை அறிவை பெற வேண்டும். எதிர்காலத்தில் எந்த பொறுப்பை பெற நினைக்கிறோமோ அதற்கேற்ப கற்க வேண்டும்.உங்களை நீங்கள் புரிந்து கொண்டால் ஆற்றல் மிக்கவர்களாக மாறலாம். வாழ்க்கையில் முன்னேற உயர்ந்த எண்ணத்துடன் கடினமாக உழைக்க வேண்டும். எந்த செயலையும் துணிவுடன் செய்து பழக வேண்டும்.இந்தியாவில் உயர்ந்த தொழில் நுட்ப வல்லுனர்கள் மற்றும் தொழிலதிபர் கள் அனைவரும் துவக்கத்தில் பட்டயச் சான்றிதழ்கள் பெற்று முன்னேறிய வர்கள். சாதிக்க நல்ல நோக்கங்கள் தேவை. எந்த நிறுவனமும் உங்களை நம்பும் வகையில் பணியாற்ற வேண்டும். அறிவு, ஆற்றல், ஒன்றாக இணைந்து பணியாற்றும் திறன் மற்றும் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்பட்டால் வாழ்வில் எளிதில் முன்னேறலாம். இவ்வாறு முன்னாள் துணை வேந்தர் பொன்னவைக்கோ பேசினார்.மின்னணுவியல் மற்றும் தொலை தொடர்பு துறைத் தலைவர் காஞ்சனா நன்றி கூறினார்.