| ADDED : ஜூலை 14, 2011 12:01 AM
திருக்கோவிலூர் : திருக்கோவிலூரில் தென்பெண்ணை ஆற்று பகுதியில் மணல் எடுப்பதால் பாலத்திற்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. திருக்கோவிலூரில் மணல் திருட்டு வாடிக்கையானது. அ.தி.மு.க., அரசு பொறுப்பேற்றவுடன் தி.மு.க., ஆட்சியில் பொதுப்பணித் துறை அதிகாரிகளால் மாட்டு வண்டிகளுக்கு வழங்கிய உரிமம் நிறுத்தப்பட்டது. இதனால் நகரம், சுற்று கிராமங்களில் மணல் தட்டுப்பாடு ஏற்பட்டதால் பொதுப் பணித்துறை அதிகாரிகள் நேரடியாக மாட்டு வண்டிகளுக்கு பாஸ் வழங்குகின்றனர். இதனை பயன்படுத்தி வண்டிகளில் மணல் எடுத்து மறைவான இடங்களில் குவித்து லாரிகள் மூலம் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு கடத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். வீடுகளுக்கு மணல் ஏற்றிச் செல்லும் மாட்டு வண்டிகளை விட லாரிகளில் மணல் ஏற்ற அதிக வண்டிகள் செல்கின்றன.
இதனால் மேம்பாலத்திற்கும், தரைப்பாலத்திற்கும் இடையே ஆற்றில் அதிக மாட்டு வண்டிகளில் மணல் எடுக்கின்றனர். மணல் எடுக்க தடை செய்துள்ள பகுதியில் தான் தொல்லியல் துறை பராமரிப்பில் இருக்கும் கபிலர் குன்று உள்ளது. இங்கு மணல் எடுப்பதால் பல போராட்டத்திற்கு பிறகு சீரமைத்த தரைப் பாலம் உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அருகில் இருக்கும் உயர்மட்ட பாலமும் உறுதி தன்மை பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மாட்டு வண்டிகளில் மணல் கடத்துவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.