நிதியை தராத மத்திய அரசு; போராடாத மாநில அரசு இரு அரசுகளின் சாயத்தை வெளுக்கிறார் பழனிசாமி
மத்திய அரசு கல்வி திட்டத்தின் கீழ், தமிழகத்திற்கு தர வேண்டிய நிதியை விடுவிக்காத மத்திய அரசுக்கும், நிதியை போராடி பெறாத தி.மு.க., அரசுக்கும், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:'சமக்ரா சிக் ஷா அபியான்' திட்டத்தின் கீழ், தமிழகத்திற்கு, மத்திய அரசு கடந்த ஜூன் மாதம் விடுவித்திருக்க வேண்டிய ரூ. 573 கோடியை, விடுவிக்காமல் நிறுத்தி வைத்துள்ளது. புதிய கல்வி கொள்கையை அமல்படுத்தாதே, இதற்கு காரணம் என கூறப்படுகிறது. தங்கள் கொள்கைகளை, கல்வி துறையில் திணித்து, மனித வளத்தை மத்திய அரசு சீர்குலைக்க முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது.மாநிலங்களின் கல்வி வளர்ச்சிக்கு, உறுதுணையாக இருக்க வேண்டியது, மத்திய அரசின் கடமை. மாநிலப் பட்டியலில் இருந்து கல்வியை, பொதுப் பட்டியலுக்கு மாற்றி, 48 ஆண்டாகிறது. இதில் 20 ஆண்டுகள் மத்திய ஆட்சியில் பங்கு பெற்றிருந்தும், தற்போது கணிசமான எம்.பி.,க்களை வைத்திருந்தும், தி.மு.க., மீண்டும் கல்வியை, மாநிலப் பட்டியலுக்கு மாற்ற முயற்சிக்காமல், நீட் பிரச்னையை போல, கல்வி பிரச்னையிலும் கபட நாடகம் ஆடுகிறது.'ஒரே வார்த்தையில் அழைத்தோம். ராணுவ அமைச்சர் நேரில் வந்து, கருணாநிதி நாணயத்தை வெளியிட்டார்' என, தம்பட்டம் அடித்து கொள்ளும் முதல்வர், அதேபோல் ஒரே வார்த்தையில் கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வராததும், நீட் தேர்வை ஒழிக்காதது ஏன்?சமக்ரா சிக் ஷா அபியான் திட்டத்தின் கீழ், மத்திய அரசு நிதியை விடுவிக்காததால், 15,000 ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கப்படாத நிலை; கல்வி உரிமை சட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளில் சேர்ந்த, ஏழை மாணவர்களுக்கு, மாநில அரசு பள்ளிக் கட்டணம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.எனவே, மத்திய அரசு உடனடியாக, முதல் தவணை நிதியை விடுவிக்க வேண்டும். தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்.பி.,க்கள், உரத்த குரலில் தமிழகத்திற்கு வர வேண்டிய நிதியை, போராடிப் பெற வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்தில் மத்திய அரசு, தமிழகத்திற்கு கடந்த ஜூன் மாதம் வழங்க வேண்டிய ரூ.573 கோடி இன்னும் வரவில்லை. இதுதொடர்பாக முதல்வரின் அறிவுறுத்தல்படி, பார்லிமென்ட் குழு தலைவர் கனிமொழி தலைமையில், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்தித்து இது தொடர்பாக கோரிக்கை வைத்தோம். பார்லிமென்ட் கூட்டத்தொடர் முடிந்தும் அந்த நிதி வரவில்லை.தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டு நடைமுறைப்படுத்தினால் தான், நிதி ஒதுக்கீடு வழங்கப்படும் என்பது போல் செயல்படுவது நியாயமல்ல. வரும் 2030ம் ஆண்டுக்கான கல்வி வளர்ச்சியின் இலக்கை அடைய, இப்போதே தமிழகத்தை ஊக்கப்படுத்தி, கூடுதலான நிதி ஒதுக்க வேண்டும்.தேசிய கல்விக் கொள்கை, விவாதம் சார்ந்த விவகாரம். அதை காரணம் காட்டி, மாணவர்களின் கல்விக்கான பங்களிப்பு நிதியை நிறுத்தி வைக்கக்கூடாது. மகேஷ், தமிழக கல்வி அமைச்சர்
கூடுதல் நிதி வேண்டும்
- நமது நிருபர்-