| ADDED : ஆக 17, 2024 03:10 AM
விழுப்புரம்: விழுப்புரம் அருகே அரசு தொடக்க பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையை ஊக்கப்படுத்த, புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு வெள்ளிக்காசு வழங்கினர். விழுப்புரம் அருகே கோலியனூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள வி.அரியலூர் அரசு தொடக்க பள்ளியில், 1 முதல் 5ம் வகுப்பு வரை 30 மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில், மாணவர்கள் சேர்க்கையை ஊக்கப்படுத்தும் வகையில், விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வகையில் இந்தாண்டு புதியதாக சேர்ந்த 1ம் வகுப்பு மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், மாணவ, மாணவிகளுக்கு தலா 10 கிராம் வெள்ளி நாணயம் பரிசாக வழங்கப்பட்டது.புதிய மாணவர்களை வரவேற்று அரசு தொடக்கப் பள்ளியில் நேற்று நடந்த நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் தமிழரசி பழனி தலைமை வகித்தார். பள்ளித் தலைமையாசிரியர் அமுதவள்ளி தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பாலசுப்ரமணியன் பங்கேற்று, புதிதாக பள்ளியில் சேர்ந்த 10 மாணவர்களுக்கு, தலா 10 கிராம் வெள்ளி காசும், மலர் மாலை, சால்வை அணிவித்தும் வரவேற்றார். ஊர் முக்கியஸ்தர்கள் முருகன், செல்வம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.