ரயில் பாதை பராமரிப்புப் பணிகள் விழுப்புரம் - திருப்பதி ரயில் பகுதியளவில் ரத்து
விழுப்புரம்: ரயில் பாதை பராமரிப்புப் பணிகள் காரணமாக, விழுப்புரம்-திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில் பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது.இது குறித்து தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட அலுவலக செய்திக்குறிப்பு: திருப்பதி-காட்பாடி ரயில் நிலையங்களுக்கு இடையேயான பகுதியில், பொறியியல் பணி மற்றும் ரயில் பாதை பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதன் காரணமாக, விழுப்புரம்- திருப்பதி இடையே தினசரி இயக்கப்படும், எக்ஸ்பிரஸ் ரயில், குறிப்பிட்ட நாட்களுக்கு பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது.விழுப்புரத்திலிருந்து அதிகாலை 5:35 மணிக்குப் புறப்படும் விழுப்புரம்-திருப்பதி விரைவு ரயில் (வ.எண். 16854), செப்., 12 முதல் 20ம் தேதி வரை காட்பாடி - திருப்பதி இடையே பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதுவரை இந்த ரயில், காட்பாடி ரயில் நிலையத்துடன் நிறுத்தப்படும்.இதே போல், எதிர் வழித்தடத்தில் திருப்பதியிலிருந்து பிற்பகல் 1:40 மணிக்குப் புறப்பட வேண்டிய திருப்பதி-விழுப்புரம் விரைவு ரயில் (வ.எண்.16853) செப். 12 முதல் 20ம் தேதி வரை திருப்பதி-காட்பாடி இடையே பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், இந்த ரயில் காட்பாடி ரயில் நிலையத்திலிருந்து, மாலை 4:40 மணிக்கு விழுப்புரத்துக்குப் புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.