சலவாதி கூட்ரோட்டில் சாலை அகலப்படுத்தும் பணி 36 மரங்கள் அடியோடு வெட்டி அகற்றம் திண்டிவனம்-சென்னை சாலையில் பணிகள் துரிதம்
திண்டிவனம்: திண்டிவனம் அருகே சலவாதி கூட்ரோட்டில் சாலை அகலப்படுத்தும் பணிக்காக, நிழல் தந்து கொண்டிருந்த 36 மரங்கள் அடியோடு வெட்டி அகற்றப்பட்டன.திண்டிவனம்-சென்னை சாலையி லுள்ள சலவாதி கூட்ரோட்டில், திருவண்ணாமலை செல்லும் புறவழிச்சாலை உள்ளது. சென்னை மற்றும் திருவண்ணாமலையிலிருந்து வரும் அனைத்து வாகனங்களும் இந்த புறவழிச்சாலை வழியாக (அரசு கல்லுாரி சாலை) வந்து செல்கின்றன.இதில் சலவாதி கூட்ரோடு அருகே ரயில்வே மேம்பாலம் அமைந்துள்ளது. மேம்பால இறக்கத்திலிருந்து திண்டிவனம் - சென்னைதேசிய நெடுஞ்சாலையிலுள்ள கூட்ரோடு வரை குறுகிய இடமாக உள்ளது. அதனால், வாகனங்கள் கூட்ரோட்டில் திரும்பும் போது அடிக்கடி விபத்து ஏற்பட்டு, உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது.கூட்ரோடு பகுதியில் விபத்துக்களை தவிர்ப்பதற்கான பணிகளை மேற்கொள்ள, நெடுஞ்சாலை துறையின் சாலை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ரூ.2.50 கோடிநிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.இதன்படி, ரயில்வே மேம்பாலத்தின் கீழ் பகுதியிலிருந்து மும்முனை கூட்ரோடு வரை உள்ள இரண்டு பக்கமும் சாலையை அகலப்படுத்தும் பணி துவங்கியது.இதற்காக கூட்ரோடு பகுதியில், திண்டிவனம் - சென்னை சாலை மற்றும் மேம்பாலத்திலிருந்து கூட்ரோடு வரை சாலையில் இரு ஓரங்களிலும் நிழல் தந்து கொண்டிருந்த மரங்கள் அனைத்தும் அடியோடு வெட்டி சாய்க்கப் பட்டன. இதில் சென்னை சாலையிலுள்ள பெரிய அளவிலான 6 புளிய மரங்கள் வேரோடு அகற்றப்பட்டன.குறுகிய சாலையை அகலப்படுத்துவதற்காக இரண்டு பக்கமும் உள்ள 36 மரங்கள் அகற்றப்பட்டதால், சலவாதி கூட்ரோடு சாலை பொட்டல் காடாக காட்சியளிக்கிறது.கூட்ரோடு பகுதியில் விபத்துகளை குறைப்பதற்காக குறுகிய சாலை விரிவாக்கம் செய்யப்பட்டாலும், பயணிகள் இளைப்பாறுவதற்கு நிழல் அளித்து வந்த மரங்கள் அகற்றப்பட்டது, பொது மக்கள் மத்தியில் மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.சாலை அகலப்படுத்தும் பணி மூன்று மாதத்திற்குள் முடிவடையும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
பதிலாக கூடுதல் மரங்கள்
சலவாதி கூட்ரோடு பகுதியில் நெடுஞ்சாலைத் துறை சார்பில் சாலை விரிவாக்க பணிக்காக சாலையோரம் இருந்த 36 மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டுள்ளன. பசுமை தீர்ப்பாய தீர்ப்பின் படி ஒரு மரம் அகற்றப்பட்டால், அதற்கு ஈடாக 10 மரங்கள் நட வேண்டும். அதன்படி, தற்போது அகற்றப்பட்ட 36 மரங்களுக்கு ஈடாக 360 மரக்கன்றுகள் அந்தப்பகுதியில் நடப்போவதாக, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.