| ADDED : மார் 21, 2024 11:55 AM
வானுார்: கண்டமங்கலம் அருகே வீட்டு மனையை விற்று, காரில் எடுத்து வரப்பட்ட 2.50 லட்சம் ரூபாயை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.வானுார் சட்டசபை தொகுதிக்குட்பட்ட கண்டமங்கலம் பகுதியில் புள்ளியியல் ஆய்வாளர் சிவரஞ்சினி தலைமையில் பறக்கும் படை குழுவினர் நேற்று முன்தினம் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். சித்தலம்பட்டு அரசுப் பள்ளி அருகே சோதனை செய்தபோது, திருக்கனுார் மார்க்கத்தில் இருந்து புதுச்சேரி நோக்கி வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர்.அப்போது, காருக்குள் 2.50 லட்சம் ரூபாய் அனுமதியின்றி எடுத்து வந்தது தெரிய வந்தது. காரில் வந்த நபரிடம் விசாரணை நடத்தினர். அதில், அரியாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த ஜெயமூர்த்தி என்பதும், தனக்கு சொந்தமான இடத்தை திருக்கனுார் பத்திரப் பதிவு அலுவலகத்தில் வேறு நபருக்கு பதிவு செய்து விட்டு, அந்த பணத்தை எடுத்து வந்ததாக தெரிவித்தார்.இருப்பினும், பணம் எடுத்து வந்ததற்கு, எந்த ஆவணங்களும் இல்லாததால், பறக்கும் படை அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்து, வானுார் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முருகேசனிடம் ஒப்படைத்தனர்.