விடுமுறை முடிந்து ஊர் திரும்பிய மக்கள் பஸ் ஸ்டாண்டில் அலைமோதிய கூட்டம்
விழுப்புரம்: தொடர் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊருக்கு சென்றவர்கள் விடுமுறை முடிந்து நேற்று பணியிடங்களுக்கு செல்ல விழுப்புரம் புதிய பஸ் ஸ்டாண்டில் குவிந்தனர். ஆயுதபூஜை, விஜய தசமி பண்டிகையை யொட்டி, தமிழக அரசு சார்பில் அரசு ஊழியர்களுக்கு ஐந்து நாட்கள் விடுமுறை விடப்பட்டது. தனியார் நிறுவனங்களிலும் விடுமுறை விடப்பட்டதால், கடந்த 30ம் தேதியே வெளி மாவட்டம், மாநிலங்களில் பணிபுரிவோர் பலரும் தங்களின் சொந்த ஊர்களுக்கு சென்றனர். பண்டிகை விடுமுறை முடிந்து நேற்று பணியிடங்களுக்கு செல்வோர் பஸ் ஸ்டாண்ட் மற்றும் ரயில்வே ஸ்டேஷன்களில் குவிந்தனர். நேற்று மாலை 5:00 மணி முதல் விழுப்புரம் புதிய பஸ் ஸ்டாண்டில் பயணிகளின் கூட்டம் அலைமோதியது. அதே போல், ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பாரங்களிலும் பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இவ்விடங்களில் பயணிகளுக்கு ஏதும் அசம்பாவிதம் ஏற்படாத வகையில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். சென்னை, திருச்சி பைபாஸ் சாலையிலும், விடுமுறை முடிந்து செல் வோரின் கார்கள், வேன்களின் அணிவகுப்பு தொடர்ந்து, டோல்கேட்கள் ஸ்தம்பித்தன.