அரசு பஸ் மோதி பைக்கில் சென்ற வாலிபர் பலி
விழுப்புரம்: விழுப்புரத்தில் அரசு பஸ் மோதிய விபத்தில் பைக்கில் சென்ற வாலிபர் இறந்தார்.விழுப்புரம் கீழ்ப்பெரும்பாக்கம் திருக்குறிப்புதொண்டர் நகரைச் சேர்ந்தவர் நாராயணமூர்த்தி மகன் விஷ்வா,22; இவர், இரு சக்கர வாகனங்களை வாங்கி விற்பது மற்றும் பழுதுபார்க்கும் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், நேற்று இரவு கடையை மூடிவிட்டு இரவு 11:30 மணிக்கு, தனது பைக்கில் வீட்டிற்கு புறப்பட்டார். அப்போது, காட்பாடி ரயில்வே மேம்பாலம் அருகே விழுப்பரம்-சென்னை சாலையில் ஆட்டோவை முந்திச்செல்ல முயன்றபோது நிலை தடுமாறி சாலையில் விழுந்தார்.அப்போது அந்த வழியாக விழுப்புரம் நோக்கி வந்த அரசு டவுன் பஸ் அவர் மீது ஏறியதால், தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே விஷ்வா இறந்தார்.விழுப்புரம் மேற்கு போலீசார், விஷ்வாவின் உடலை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.புகாரின் பேரில், வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.