பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு தடகள போட்டி
விழுப்புரம்:விழுப்புரம் கீழ்பெரும் பாக்கம் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான தடகள போட்டி நடந்தது. இதில் எஸ்.பி., சரவணன் தலைமை தாங்கி, போட்டியை துவக்கி வைத்து பேசினார். மாவட்ட விளையாட்டு அலுவலர் ஆழிவாசன், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் செந்தில்குமார், தடகள சங்க தலைவர் பொன்னுசாமி கார்த்திக், செயலாளர் மணிவண்ணன் முன்னிலை வகித்தனர். இதில், 14, 16, 18, 28 வயது பிரிவுகளில் மாணவ- மாணவியருக்கு தனித்தனியே ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல், தடை தாண்டி ஓட்டம், மும்முறை தாண்டுதல், ஈட்டி எறிதல் உள்ளிட்ட போட்டிகள் நடந்தன. இந்த போட்டியில் மாவட்டத்தை சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றனர். ஒவ்வொரு போட்டியிலும் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசு கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்கள், செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை துவங்கும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்றனர்.