மழை பாதித்த இடங்களில் மத்திய குழுவினர் ஆய்வு
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி மற்றும் சுற்றுப்புற பகுதியில் புயல் மற்றும் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிட, மத்திய அரசின் அதிகாரிகள் குழுவினர் நேற்று காலை வந்தனர். கலெக்டர் அலுவலகத்தில், மத்திய குழுவினர், கலெக்டர் பழனி உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் வெள்ள சேத மதிப்புகள் குறித்து ஆய்வு கூட்டம் நடத்தினர்.பின், மத்திய அரசின் அதிகாரிகள், இரண்டு குழுக்களாக பிரிந்து, மாவட்டத்தில் பல்வேறு இடங்களை, நேரில் சென்று பார்வையிட்டனர். தொடர்ந்து திருக்கோவிலுார் சட்டசபை தொகுதியில் பல்வேறு இடங்களில் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டு, ஆய்வு செய்தனர்.வியாபாரிகளிடம் குறைகளை கேட்டனர். சேத விபரம் குறித்து மத்திய குழுவினருக்கு, மாநில அதிகாரிகள் படக்காட்சிகள் மூலம் விளக்கினர்.விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தாலுகா, கொய்யாதோப்பு, பாத்திமா நகர் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க கோரி மக்கள் மறியல் போராட்டம் நடத்தினர்.இதுபற்றி தகவலறிந்த அதிகாரிகள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு நடத்தினர். கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக உறுதி கூறியதை அடுத்து, காலை 11.30 மணிக்கு மறியல் கைவிடப்பட்டது. - நமது நிருபர் -