வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை ஏற்பாடு; அரசுத் துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுரை
விழுப்புரம்: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. மரக்காணம் தாலுகா அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினார். ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் (பயிற்சி) இளவரசி முன்னிலை வகித்தார். மரக்காணம் பேரூராட்சி செயல் அலுவலர் ஜேம்ஸ் டி சாமி, தாசில்தார் நீலவேணி உட்பட அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில், கலெக்டர் பேசுகையில், 'கடலோர பகுதியான மரக்காணம் மற்றும் வானுார் தாலுகாக்களில் உள்ள மீனவ கிராமங்களில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். பேரிடர் பாதுகாப்பு மையங்கள் மற்றும் புயல் பாதுகாப்பு மையங்களில், பொதுமக்களை தங்க வைப்பதற்கும், அவர்களுக்கான அடிப்படை வசதிகள், உணவுப்பொருட்கள் உள்ளிட்ட ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும். காவல்துறை, தீயணைப்புத் துறையினர் மூலம் கனமழை அதிகம் உள்ள பகுதி மக்களை, புயல் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வருவாய் துறை சார்பில் வி.ஏ.ஓ.,க்கள் அனைத்து கிராமங்களிலும் தொடர் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும். ஊரக வளர்ச்சித் துறை, நெடுஞ்சாலைத்துறை, மின்துறை, நீர்வளத்துறை, மீன்வளத்துறை அலுவலர்கள் மீட்பு பணிகளுக்கு தயார் நிலையில் இருக்க வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்கள், வட்டார மருத்துவமனைகள் மற்றும் அனைத்து தலைமை மருத்துவமனைகள் மூலம் பேரிடரின்போது தொற்றுநோய் ஏற்படாதபடி நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து பகுதிகளிலும் சுகாதாரமான குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். அனைத்துத் துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்' என்றார். முன்னதாக மரக்காணம் பேரூராட்சி, அழகன்குப்பத்தில் உள்ள பேரிடர் கால பல்நோக்கு பாதுகாப்பு மையத்தை கலெக்டர் ஆய்வு செய்தார்.