லாரி மோதி பைக்கில் சென்ற கட்டட தொழிலாளி பலி; லாரி கண்ணாடியை உடைத்து சாலை மறியல்
விழுப்புரம் : விழுப்புரம் அருகே புதுச்சேரி பைபாஸ் சாலையில் டிப்பர் லாரி மோதிய விபத்தில் பைக்கில் சென்ற கட்டட தொழிலாளி இறந்தார். பொதுமக்கள் லாரி கண்ணாடியை உடைத்து மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது விழுப்புரம் அருகே சாலாமேடு கிராமத்தை சேர்ந்தவர் மகாலிங்கம் மகன் பாலமுருகன், 40; கட்டட தொழிலாளி. இவர், நேற்று மதியம் 3:00 மணிக்கு அதே பகுதியை சேர்ந்த உறவினர்களான விக்னேஷ், 27; ராஜ்குமார், 28; ஆகியோரை 'பைக்'கில் அமர வைத்து, திருப்பாச்சனுாரில் இருந்து சாலாமேடு நோக்கி சென்று கொண்டிருந்தார். விழுப்புரம்-புதுச்சேரி பைபாஸ் சாலை மேலமேடு மேம்பாலத்தின் கீழ், பைக்கில் சாலாமேடு நோக்கி வந்தபோது, ஜானகிபுரம் பகுதியிலிருந்து புதுச்சேரி மார்க்கமாக, அதிவேகமாக சர்வீஸ் சாலையில் சென்ற டிப்பர் லாரி ஒன்று பைக் மீது மோதியது. பைக் நீண்டதுாரம் இழுத்துச்செல்லப்பட்டதால், பாலமுருகன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்தார். மற்ற இருவரும் பலத்த காயமடைந்தனர். அவர்கள், ஆபத்தான நிலையில், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனையறிந்து திரண்டு வந்த சாலாமேடு பகுதி பொது மக்கள், கோர விபத்தை கண்டித்தும், விபத்தை ஏற்படுத்திய டிப்பர் லாரியின் கண்ணாடியை உடைத்தும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த விழுப்புரம் தாலுகா போலீசார், நடவடிக்கை எடுப்பதாக கூறி, பொது மக்களை சமாதானப்படுத்தி, மறியலை கைவிட செய்தனர். இந்த சம்பவத்தால், அந்த சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து, விழுப்புரம் தாலுகா போலீசார், விபத்து குறித்து வழக்கு பதிந்து, தப்பியோடிய லாரி டிரைவ ரை தேடி வருகின்றனர்.