புறவழிச்சாலையில் வாகன ஓட்டிகள் திக்... திக்...
விழுப்புரத்தில் புறவழிச்சாலைகளில் இருசக்கர வாகனங்களில் வீலிங் ரேஸ் செல்லும் பந்தய வீரர்களால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.சென்னை, திருச்சி உட்பட தென் மாவட்ட வாகனங்கள் அனைத்திற்கும் முக்கிய போக்குவரத்து புறவழிச்சாலையாக விழுப்புரம் உள்ளது. இது மட்டுமின்றி, தற்போது புதுச்சேரி புறவழிச்சாலையும் வாகன ஓட்டிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.சென்னை, கோவை, பெங்களூரு உள்ளிட்ட வெளி மாவட்ட, மாநிலங்களில் வாகனங்களுக்கான பந்தயம் நடத்த போலீசார் தடை விதித்ததோடு கண்காணிப்புகளையும் பலப்படுத்தியுள்ளனர்.இதையொட்டி, வெளிமாவட்ட, மாநிலங்களைச் சேர்ந்த ரேசிங் வீரர்கள் விழுப்புரம் மாவட்ட புறவழிச்சாலையை தேர்வு செய்து பந்தயம் நடத்துகின்றனர்.சென்னை மார்க்கமாக வருவோர் கிளியனுார், மரக்காணம் கிழக்கு கடற்கரை சாலையிலும், கோவை, சேலம் மார்க்கத்தில் இருந்து வருவோர் புதுச்சேரி புறவழிச்சாலையிலும் இருசக்கர வாகனங்களில் ரேஸ் நடத்துகின்றனர்.வீலிங் உள்ளிட்ட சாகசங்களை செய்தபடி இவர்கள் செல்வதால், மற்ற வாகனங்களில் செல்வோர் அச்சத்தோடு செல்கின்றனர்.இங்கு போலீசாரின் கண்காணிப்பும் குறைந்துள்ளதால் தைரியமாக பந்தயத்தில் ஈடுபடுகின்றனர். வாகன ஓட்டிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் இவர்களின் சாகசத்தை, போலீசார் கண்காணித்து தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.