உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பேக்கரி குடோனில் ரூ.4.65 லட்சம் திருடிய ஊழியர் கைது

பேக்கரி குடோனில் ரூ.4.65 லட்சம் திருடிய ஊழியர் கைது

வானுார்: வானுார் அருகே வேலை செய்யும் பேக்கரி குடோனில் இருந்து 4.65 லட்சம் ரூபாயை திருடிய ஊழியரை போலீசார் கைது செய்தனர். புதுச்சேரி, மூலகுளத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவருக்கு புதுச்சேரி, கடலுார் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நெல்லை சாந்தி என்ற பேக்கரி கடைகள் உள்ளது. பூத்துறை பகுதியில் பேக்கரி குடோன் உள்ளது. கடந்த 1ம் தேதி இரவு தனது பேக்கரியில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு சம்பளம் போடுவதற்கு, குடோனில் உள்ள பீரோவில் 4.65 லட்சம் ரூபாய் வைத்திருந்தார். 2ம் தேதி காலை குடோன் மேலாளர் கோவில்பட்டியைச் சேர்ந்த விஜயராஜ் சென்று பார்த்தபோது, பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த 4.65 லட்சம் ரூபாய் திருடு போனது தெரியவந்தது. விஜயராஜ் அளித்த புகாரின் பேரில், ஆரோவில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். மேலும், குடோனில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அதில், குடோனில் கடந்த 2 மாதங்களாக வேலை செய்து வந்த ராமநாதபுரம் மாவட்டம் கீழராமநதி கிராமத்தைச் சேர்ந்த ராஜூ மகன் சுந்தர், 19; என்பவர், குடோனில் இருந்த சாவியை எடுத்து பீரோவை திறந்து பணத்தை திருடியது தெரிய வந்தது. போலீசார் அவரை தேடி வந்த நிலையில் சுந்தர், சென்னையில் இருப்பதாக தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார், சுந்தரை கைது செய்து, அவரிடம் இருந்த 4.65 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !