மேலும் செய்திகள்
குறுவை பயிர் சேதம்: விவசாயிகள் கவலை
17-Jul-2025
திருவெண்ணெய்நல்லுார்: மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சேதமானதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லுார் பகுதியில் விவசாயிகள் அதிகளவில் நெல் பயிரிடுவது வழக்கம். இந்நிலையில் பெரும்பாலான விவசாயிகள் தற்போது, 'நவரை' பட்டம் அறுவடை செய்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக சிறுவானுார் கிராமத்தில் கதிர் முற்றி நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்தன. இதனிடையே கடந்த ஒரு வாரமாக மாலை மற்றும் இரவு நேரங்களில் சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சிறுவானுார் உள்ளிட்ட பல்வேறு கிராமப்பகுதி வயல்களில் மழை நீர் தேங்கி அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சாய்ந்துள்ளன. இயந்திரம் மூலம் அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இது குறித்து விவசாயி ஒருவர் கூறுகையில், 'எதிர்பாராத விதமாக அதிகளவு மழை பெய்ததால், நெற்பயிர்கள் சாய்ந்து நீரில் மூழ்கியுள்ளன. இதனால் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அரசு தரப்பில் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்,' என்றார்.
17-Jul-2025