சேறும் சகதியுமான சாலை; பொதுமக்கள் அவதி
திருவெண்ணெய்நல்லுார்; திருவெண்ணெய்நல்லுாரில் சேறும் சகதியுமாக உள்ள சாலையை சீரமைக்க கோரிக்கை எழுந்துள்ளது. திருவெண்ணெய்நல்லுார் பேரூராட்சி 8வது வார்டு பாலாஜி கார்டன் பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் கடந்த ஆட்சி இறுதியில் தார் சாலை அமைக்கப்பட்டது. அச்சாலையை அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மட்டுமின்றி அணைக்கட்டு சாலைக்கு செல்பவர்கள், மார்க்கெட் கமிட்டிக்கு செல்பவர்கள் உள்ளிட்டோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் பெய்த மழையால் சாலை சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி விழுவதும், பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலையும் நீடிக்கிறது. இது மட்டுமின்றி அவசர காலங்களில் கார், ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்கள் அந்த வழியாக செல்ல முடியாத சூழல் உள்ளது. இதனால், அப்பகுதியில் உடனடியாக புதிய தார் சாலை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.