போலீசாரின் அலட்சியத்தால் தொடரும் வழிப்பறி: விழுப்புரத்தில் மக்கள் அச்சம்
விழுப்புரத்தில் அருகருகே காவல் நிலையம், காவல் தலைமையகம், டி.எஸ்.பி., அலுவலகம் இருந்தும், வழிப்பறியும், திருட்டும் தொடர்வது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.விழுப்புரம் அடுத்த தொடர்ந்தனூரைச் சேர்ந்தவர் ஸ்டீபன் மனைவி ரூபி, 28; இவர், கடந்த 18ம் தேதி இரவு, தனது தந்தை அந்தோணிசாமியுடன் பைக்கில், காகுப்பம் நோக்கி சென்றபோது, கீழ்ப்பெரும்பாக்கம் சுடுகாடு அருகே பைக்கில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு பேர், ரூபி கழுத்திலிருந்த 5 சவரன் தங்க செயினை பறித்துச் சென்றனர்.அதே நாளில், விழுப்புரம் பாண்டியன் நகரை சேர்ந்தவர் ஏசுராஜ் மகன் ஸ்டீபன், 35; இவர், சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் ஜானகிபுரம் அருகே பைக்கில் அமர்ந்து மொபைல்போன் பேசிக்கொண்டிருந்தபோது, பைக்கில் வந்த இருவர், இங்கு மது அருந்தலாமா எனக்கேட்டு, ஸ்டீபனை கல்லால் தாக்கிவிட்டு, 2 சவரன் செயின், மொபைல்போன் மற்றும் பைக்கை பறித்துச்சென்றுள்ளனர்.இதே போல், கடந்த 8ம் தேதி பனையபுரம் பகுதியிலிருந்து, விழுப்புரம் மீன் மார்க்கெட்டிற்கு அதிகாலை 4:00 மணிக்கு பைக்கில் வந்த 4 மீன் வியாபாரிகளை மர்ம நபர்கள் வழிமறித்து, கத்தியால் குத்திவிட்டு, பணத்தை பறித்துச் சென்றனர். இந்நிலையில், நேற்று பட்டப் பகலில் காலை 8:00 மணிக்கு விழுப்புரம் பைபாஸ் சாலையில் சென்ற நர்சிடம், பைக்கில் வந்த மர்ம நபர்கள் 5 சவரன் செயினை பறித்துச் சென்றுள்ளனர்.இரு தினங்களுக்கு முன்பு, வழுதரெட்டி பாண்டியன் நகரில், ஓய்வு பெற்ற கண்டக்டர் ஆறுமுகம் வீட்டில், மாலை 6 மணிக்கு கதவை உடைத்து புகுந்து, 3 மர்ம நபர்கள் 6 சவரன் நகை, ரூ.1,500 பணத்தை திருடிச் சென்றனர்.கடந்த வாரம் சாலாமேடு மின்துறை ஊழியர் வீட்டில் 40 சவரன் நகை திருட்டு போனது. அருகே என்.ஜி.ஓ., காலனியில் போலீஸ் அதிகாரி வீட்டில் 50 சவரன் நகை மற்றும் ரூ.1 லட்சம் பணம் திருட்டு போனது.விழுப்புரத்தில் தொடர்ந்து, இரண்டு வாரங்களில் தொடர் திருட்டும், வழிப்பறி சம்பவங்களும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் ஆளில்லாததை நோட்டமிடும் கும்பல், திருட்டில் ஈடுபடுகின்றனர். வழிப்பறி சம்பவமும் ஆள்நடமாட்டம் உள்ள பகுதியில் நடக்கிறது.இதில், மீன் வியாபாரியிடம் வழிப்பறி செய்த, விழுப்புரம் ஜி.ஆர்.பி., தெருவைச் சேர்ந்த 3 பேரை மட்டும் போலீசார் கைது செய்தனர். ஆனாலும், தொடர்ந்து, திருட்டும் வழிப்பறியும் நடப்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.விழுப்புரத்தில் அருகருகே 3 காவல் நிலையம், எஸ்.பி., அலுவலகம், டி.எஸ்.பி., அலுவலகம் என போலீசார் நடமாட்டம் இருந்தும், போதிய இரவு ரோந்து போன்ற கண்காணிப்பில்லாததால், திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளது. இதனால், காவல் துறை தனது அதிரடி ரெய்டை மேற்கொண்டு, மக்களின் அச்சத்தை போக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.