விழுப்புரத்தில் 14 அம்ச கோரிக்கை வலியுறுத்தி மறியல்: 130 பேர் கைது
விழுப்புரம்: விழுப்புரத்தில் 14 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்ட அரசு பணியாளர் சங்கத்தினர் 130 பேர் கைது செய்யப்பட்டனர்.தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் சார்பில், பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விழுப்புரம் நகராட்சி திடல் அருகே நடந்த மறியல் போராட்டத்திற்கு மாநில தலைவர் சரவணன் தலைமை வகித்தார். டாஸ்மாக் பணியாளர் சங்க மாநில பொருளாளர் ஜெயகனேஷ் வரவேற்றார்.மாநில துணை தலைவர் சிவக்குமார், சத்துணவு பணியாளர் சங்க தலைவர் சீனுவாசன், ஊராட்சி களப்பணியாளர் சங்க தலைவர் குப்புசாமி, ரேஷன் கடை பணியாளர் சங்க தலைவர் சேகர், கோதண்டம், பழனிபாரதி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மாநில சிறப்பு தலைவர் பாலசுப்ரமணியன் சிறப்புரையாற்றினார்.அரசு பணியாளர்களுக்கான பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த வேண்டும், தொகுப்பூதியம், மதிப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் சத்துணவு, அங்கன்வாடி, நியாய விலை, டாஸ்மாக் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு நிரந்தர காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கையை வலியுறுத்தினர்.பகல் 12.00 மணிக்கு திருச்சி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பாலசுப்ரமணியன் உள்ளிட்ட 130 பேரை, தாலுகா போலீசார் கைது செய்து, தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.