மாஜி அமைச்சர் மீதான குவாரி வழக்கு சாட்சி விசாரணைக்காக ஒத்திவைப்பு
விழுப்புரம்: முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு, கூடுதல் சாட்சிகளிடம் விசாரணை செய்வதற்காக வரும் 9ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டம், வானுார் அருகே பூத்துறை செம்மண் குவாரியில், அரசு அனுமதித்ததை விட அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததன் மூலம் அரசுக்கு 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக, புகார் எழுந்தது. இது தொடர்பாக, முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதமசிகாமணி, ஜெயச்சந்திரன், ராஜமகேந்திரன், கோபிநாதன், கோதகுமார், சதானந்தம், லோகநாதன் உள்ளிட்ட 8 பேர் மீது கடந்த 2012ம் ஆண்டு விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிந்தனர். இந்த வழக்கு விசா ரணை விழுப்புரம் மாவட் ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடக்கிறது. இவ்வழக்கில் குற்றம் சாற்றப்பட்ட லோகநாதன் உடல்நலக் குறைவால் இறந்தார். இந்த வழக்கில் அரசு தரப்பு சாட்சிகளின் விசாரணை கடந்த அக்டோபர் மாதம் முடிந்தது. இதில், 57 சாட்சிகளில் 30 பேர் பிறழ் சாட்சியம் அளித்தனர். இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில், கோபிநாதன், சதானந்தம், கோதகுமார் ஆஜராகினர். தி.மு.க., வழக்கறிஞர்கள் ஆஜராகி, பொன்முடி உள்ளிட்ட நால்வர் ஆஜராகாத காரணம் குறித்து மனுதாக்கல் செய்தனர். மேலும், 9 சாட்சிகளிடம் விசாரணை செய்ய அனுமதி கேட்டு மனுதாக்கல் செய்தனர். இந்த மனுவை ஏற்று கொண்ட மாவட்ட நீதிபதி மணிமொழி, விசாரணையை வரும் 9ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.