அரசு அலுவலக வளாகங்களில் மழைநீர் தேங்கும் அவலம்
விழுப்புரம்: பெருந்திட்ட வளாகத்தில் கால்வாய் துார்ந்துள்ளதால், அரசு அலுவலக வளாகங்களில் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் கலெக்டர், டி.ஐ.ஜி., - எஸ்.பி., உள்ளிட்ட அரசு துறைகளின் தலைமை அதிகாரிகளின் அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த பெருந்திட்ட வளாகத்தில் மழைநீர் தேங்குவதை தடுக்க கால்வாய் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், இந்த கால்வாய் பல இடங்களில் துார்ந்துள்ளது. இதனால், பெருந்திட்ட வளாகத்தில் தேங்கும் மழைநீர் வெளியேற வழியில்லை. விழுப்புரம் வட்டார போக்குவரத்து அலுவலக வளாகம், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் உள்ளிட்ட பல அலுவலகங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால், கொசுக்கள் அதிகரித்துள்ளதால் அலுவலர்கள் அவதியடைந்து வருகின்றனர். எனவே, பெருந்திட்ட வளாக அரசு அலுவலகங்களில் மழைநீர் தேங்காமல் தடுக்க கால்வாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.