ரூ.10,000 லஞ்சம் வி.ஏ.ஓ.,வுக்கு காப்பு
செஞ்சி:பட்டா பெயர் மாற்றம் செய்ய, 10,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ.,வை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த வரிக்கல் கிராமத்தை சேர்ந்தவர் கோகுலகிருஷ்ணன், 33; இவர், தன் தாத்தா தானமாக கொடுத்த நிலத்தை, தன் பெயருக்கு பட்டா மாற்றம் செய்து தர, செப்., 26ல் செஞ்சி தாசில்தார் அலுவலகத்தில் மனு கொடுத்தார். இந்த மனு, வரிக்கல், மேல்அருங்குணம் வி.ஏ.ஓ., தேவராஜ், 45, என்பவரிடம் விசாரணைக்கு வந்தது. அவர், பட்டா பெயர் மாற்றம் செய்ய, 20,000 ரூபாய் லஞ்சம் கேட்டார். கோகுலகிருஷ்ணன் நேற்று காலை, விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். போலீசாரின் ஆலோசனையின் படி, நேற்று பகல், 12:20 மணியளவில் வரிக்கல் வி.ஏ.ஓ., அலுவலகத்தில் இருந்த தேவராஜிடம், கோகுலகிருஷ்ணன், 10,000 ரூபாயை கொடுத்தார். அங்கு மறைந்திருந்த போலீசார் தேவராஜை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.