விளையாட்டு மைதானத்தில் கழிவுநீர்: விழுப்புரத்தில் மாணவர்கள் அவதி
விழுப்புரம்: விழுப்புரம் நகராட்சி மைதானத்தில் கழிவுநீரை உடைத்து விட்டுள்ளதால், மாணவர்கள் மற்றும் அரசு அலுவலர்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.விழுப்புரம் திரு.வி.க., வீதி மற்றும் அதன் சுற்றுப்புற நகர்களில் நுாற்றுக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்புகளின் கழிவுநீர், கால்வாய் மூலம் நகராட்சி மைதானத்தையொட்டி, ரயில் நிலையம் வழியாக வெளியேற்றப்படுகிறது. இந்த கால்வாயில் ரயில் நிலையம் பகுதியில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், கழிவுநீர் செல்லாமல் தேங்கி அப்பகுதி குடியிருப்புகளை சூழும் நிலை ஏற்பட்டது.இதையடுத்து, நகராட்சி மைதானத்தின் சுற்றுசுவரை உடைத்து, கழிவுநீரை மைதானத்திற்குள் விட்டுள்ளனர். இதனால், கழிவுநீர் முழுதும் மைதானத்திற்குள் குட்டை போல் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுகிறது.இந்த மைதானத்தில் அரசு இசைப்பள்ளி, அங்கன்வாடி மையம் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் மற்றும் அருகில் காமராஜர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது.தேங்கிய கழிவுநீரில் இருந்து வரும் துர்நாற்றத்தால் மாணவர்கள், அரசு அலுவலர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். மேலும், மாணவர்கள் மற்றும் அலுவலர்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.எனவே, நகராட்சி மைதானத்தில் கழிவுநீர் செல்வதை தடுக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.