விழுப்புரத்தில் சூறைகாற்றுடன் திடீர் மழை
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், திடீர் சூறை காற்றுடன் நள்ளிரவு மழை பெய்ததால், கோடை வெயிலின் தாக்கம் சற்று தணிந்து மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். விழுப்புரம் மாவட்டத்தில், ஏப்ரல் மாதம் தொடக்கத்திலிருந்தே கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. கடந்த 4ம் தேதி அக்னி நட்சத்திர கத்தறி வெயில் தாக்கம் துவங்கியது. இதனால் பகல் நேரத்தில் சுட்டெரித்து வந்த வெயில் தாக்கத்தை கட்டுப்படுத்தும் விதமாக நேற்று இரவு விழுப்புரம் மாவட்டத்தில் திடீர் கோடை மழை பெய்து மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. விழுப்புரத்தில் நேற்று இரவு 11.00 மணிக்கு குளிர்ந்த காற்றுடன் கூடிய திடீர் மழை பெய்தது. 15 நிமிடம் மழையுடன் சூறை காற்று வீசியதுடன், தொடர்ந்து 45 நிமிடம் பலத்த மழை பெய்தது. திண்டிவனம், செஞ்சி, கண்டமங்கலம், வானூர், மரக்காணம், விக்கிரவாண்டி என மாவட்டம் முழுவதும் இரவு காற்றுடன் கூடிய திடீர் மழை பெய்தது. ஒரு மணி நேரம் பெய்த மழையால், விழுப்புரம் நகரில் முக்கிய சாலைகளில் மழை நீர் வழிந்தோடி தாழ்வான இடங்களில் தேங்கியது. செஞ்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு கடும் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. மழையின் போது கருங்குழி கிராமத்தில் மணி என்பவரின் பசுமாடும், மேல் அத்திப்பாக்கத்தில் எல்லம்மாள் என்பவரின் பசு மாடு மின்னல் தாக்கி இறந்தன. நெல் வயல்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால், அறுவடை இயந்திரங்களை பயன்படுத்தி நெல் அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
செம்மேடில் 7 செ.மீ., மழை
மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு 8.00 மணி முதல் காலை 8.00 மணி வரை பெய்த மழையளவு (மீ.மீ) ; விழுப்புரம் 24, கோலியனூர் 34, வளவனூர் 29, கெடார் 25, முண்டியம்பாக்கம் 51, நேமூர் 28, கஞ்சனூர் 37, சூரப்பட்டு 30, செஞ்சி 63, செம்மேடு 70, வள்ளம் 23, அவலூர்பேட்டை 25, அனந்தபுரம் 20, வளத்தி 55.