சாலை வசதி கேட்டு பொதுமக்கள் மறியல் செய்ய முயன்றதால் பரபரப்பு
விழுப்புரம்: விழுப்புரம் லட்சுமி நகரில் சாலை வசதி செய்து தரக்கோரி, பொதுமக்கள் புதுச்சேரி நெடுஞ்சாலையில் மறியல் செய்ய திரண்டதால் பரபரப்பு நிலவியது. விழுப்புரம், கிழக்கு பாண்டி ரோட்டில், நகராட்சிக்குட்பட்ட 30வது வார்டில் அனிச்சம்பாளையம், வி.கே.எஸ்., லட்சுமி நகர் குடியிருப்பு உள்ளது. இங்கு 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். லட்சுமி நகர் விரிவு, ராகவேந்திரா தெரு, பாரதிதாசன் வீதி உட்பட பல்வேறு தெருக்களில் சாலைகள் மோசமான நிலையில் உள்ளது. நகராட்சி நிர்வாகம் கட்டுப்பாட்டின் கீழ் வரும் இந்த சாலை தற்போது மழையால் சேறும், சகதியுமாக பயணிக்க லாயக்கற்ற நிலையில் உள்ளது. அதிகாரிகளிடம் பலமுறை கூறியும், நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த லட்சுமி நகர் மக்கள், நேற்று காலை 8:45 மணிக்கு விழுப்புரம் - புதுச்சேரி நெடுஞ்சாலையில் மறியல் செய்ய திரண்டனர். தகவலறிந்த விழுப்புரம் டவுன் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து, நகராட்சி நிர்வாகம் மூலம் சேதமான சாலைகளில் தற்காலிக சீரமைப்பு பணிகள் உடனே மேற்கொள்வதாகவும், விரைவில் புதிய சாலை போட்டு தர அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில், மக்கள் கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.