கட்டுப்பாட்டை இழந்த பஸ்; உயிர் தப்பிய பயணிகள்
செஞ்சி: செஞ்சி அருகே கட்டுப்பாட்டை இழந்த அரசு பஸ் பள்ளத்தில் இறங்கியது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் காயமின்றி தப்பினர்.சென்னையில் இருந்து திருவண்ணாமலை சென்ற அரசு பஸ் நேற்று இரவு 7:00 மணியளவில் களையூர் கூட்ரோடு அருகே வந்து கொண்டிருந்தது. மழை பொழிந்து கொண்டிருந்தது.அப்போது, குறுக்கே பைக்கில் வந்த நபர் மீது மோதாமல் இருக்க டிரைவர் திடீர் பிரோக் போட்டார். வழுவழுப்பான சாலையில் மழை நீர் இருந்ததால் பிரேக் அடித்தும் பஸ் நிற்காமல் கட்டுப்பாட்டை இழுந்து பக்க வாட்டில் இருந்த கல்வெர்ட் மீது மோதி பள்ளத்தில் இறங்கி நின்றது.இதில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் அனைவரும் காயமின்றி தப்பினர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பயணிகளை மாற்று பஸ்களில் திருவண்ணாமலை மற்றும் செஞ்சிக்கு அனுப்பி வைத்தனர். பஸ்சை இரண்டு கிரோன்களின் உதவியுடன் பள்ளத்தில் இருந்து மீட்டனர்.