உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அரசு கொடுத்ததோ 11; இருப்பதோ 6 திண்டாடுகிறது செஞ்சி மருத்துவமனை

அரசு கொடுத்ததோ 11; இருப்பதோ 6 திண்டாடுகிறது செஞ்சி மருத்துவமனை

செஞ்சி அரசு பொது மருத்துவமனை செஞ்சி, மேல்மலையனுார் தாலுகாவை சேர்ந்த பொது மக்களுக்கான பொது மருத்துவமனையாக உள்ளது. இந்த இரண்டு தாலுகாவிலும் 6 லட்சத்திற்கும் அதிகமாக மக்கள் வசிக்கின்றனர்.இந்த தாலுகாவில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சைக்கு செல்பவர்களை மேல்சிகிச்சைக்காக செஞ்சி அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைக்கின்றனர்.பெண்கள், ஆண்கள், குழந்தைகள் உள்நோயாளிகள் பிரிவும், மகப்பேறு பிரிவும் இயங்கி வருகிறது.தினமும் புறநோயாளிகளாக காலையில் 800 முதல் 900 பேர் வருகின்றனர். மாலை நேரத்தில் 300க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சைக்கு வருகின்றனர். விபத்து, அவசர சிகிச்சை, தொடர் பரிசோதனை என எந்த நேரமும் பிசியான மருத்துமனையாக செயல்படுகிறது.இங்கு மொத்தம் 17 டாக்டர்கள் பணியிடம் உள்ளது. தற்போது 11 டாக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் மூன்று பேர் திண்டிவனம் அரசு மருத்துமனைக்கும், விழுப்புரம், மரக்காணத்திற்கு தலா ஒருவர் என 5 பேர் மாற்று பணிக்கும் அனுப்ப பட்டுள்ளனர்.மீதம் உள்ள 6 டாக்டர்களில் மகப்பேறு, பொது அறுவை சிகிச்சை, அவசர சிகிச்சை, உள்நோயாளிகள், புற நோயாளிகள் என அதிக வேலை பளுவுக்கு ஆளாகி உள்ளனர்.சில நாட்கள் இரவு, பகல் என இரண்டு நேரமும் ஒரே டாக்டர்கள் பணி செய்கின்றனர். இவர்கள் மறு நாள் ஓய்வில் இருக்கின்றனர். இது போன்ற நாளில் மருத்துவர் எண்ணிக்கை மேலும் பாதியாகி விடுகின்றது.இதனால் ஒரே ஒரு டாக்டர் புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். காலையில் 800க்கும் அதிகமான நோயாளிகளையும், மாலையில் 300க்கும் மேற்பட்டவர்களுக்கும் சிகிச்சை அளிக்கின்றனர்.காலையில் ஒரு டாக்டர் மட்டும் சிகிச்சையளிப்பதால் நோயாளிகள் பல மணி நேரம் நோய் உபாதையுடன், கடும் சிரமத்துடன் நீண்ட வரிசையில் காத்திருந்து சிகிச்சை பெறும் அவல நிலை உள்ளது.எனவே செஞ்சி அரசு மருத்துமனைக்கு தேவையான டாக்டர்களை நியமித்து புறநோயாளிகளை நீண்ட நேரம் காக்க வைக்காமல் சிகிச்சை அளிக்க மாவட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை