திண்டிவனம் அருகே வீட்டிற்குள் புகுந்து 17 சவரன் நகைகள் திருட்டு
திண்டிவனம், : திண்டிவனம் அருகே வீட்டிற்குள் புகுந்து 17 சவரன் நகைகள் திருடு போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.திண்டிவனம் அருகே உள்ள நடுவனந்தல் கிராமம் குளக்கரை தெருவில் வசிப்பவர் முருகன், இவர் சென்னை கோயம்பேட்டில் அரசு டிரைவராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கலையரசி, 42;கலையரசி நேற்று முன்தினம் மாலை வீட்டின் கதவை பூட்டிவிட்டு, அங்குள்ள பாத்ரூமில் வீட்டின் சாவியை வைத்துவிட்டு, அகூரிலுள்ள நிலத்திற்கு சென்றுவிட்டார்.இவருடைய மகள் தீபிகா, 19; நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் வீட்டிற்கு வந்து பாத்ரூமில் வைத்திருந்த சாவியை எடுத்து வீட்டின் உள்ளே சென்றுள்ளார். பின்னர் கப்போர்டில் வைத்திருந்த நகை பையை எடுக்க சென்ற போது, பை கீழே கிடந்துள்ளது. பையை பார்த்த போது, அதிலிருந்த 17 சவரன் நகைகள் காணாமல் போயிருந்தது தெரியவந்தது. அந்த பையில் 10 மோதிரங்கள் மற்றும் 5 சவரன்செயின் மட்டும் திருடு போகாமல் அப்படியே இருந்துள்ளது. சம்பவம் குறித்து கலையரசி கொடுத்துள்ள புகாரின் பேரில் வெள்ளிமேடுப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து, யார் நகையை திருடி சென்றார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.