தர்பூசணியில் கலப்படம் இல்லை தோட்டக்கலைத் துறை விளக்கம்
விழுப்புரம்: தர்பூசணி பழங்களின் நிறம் மற்றும் சுவைக்காக எவ்வித செயற்கை ரசாயனமும் செலுத்தப்படவில்லை.விழுப்புரம் தோட்டக்கலை துணை இயக்குநர் செய்திக்குறிப்பு:விழுப்புரம் மாவட்டத்தில் தர்பூசணி பயிர் 9,000 ஏக்கர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. மரக்காணம், வானுார், முகையூர், மயிலம், ஒலக்கூர், மேல்மலையனுார் மற்றும் விக்கிரவாண்டி தாலுகாக்களில் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இப்பழத்தில் கலப்படம் செய்யப்படுவதாக சில தினங்களாக உண்மைக்கு முரணான செய்தி பரவியது.அதன் உண்மை நிலை குறித்து மரக்காணம், ஒலக்கூர், வானுார் தாலுகாக்களில் தோட்டக்கலை துணை இயக்குநர்கள் மற்றும் இதர அலுவலர்களால் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வில், பழங்களை பறித்து உணவு பாதுகாப்பு துறையுடன் இணைந்து ரசாயன ஆய்வுக்குட்படுத்தப்பட்டது.அதில் தர்பூசணி பழங்களின் நிறம் மற்றும் சுவைக்காக எவ்வித செயற்கை ரசாயனமும் செலுத்தப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது.தக்காளி, சிவப்பு கொய்யா, திராட்சை போன்ற பழங்களில் உள்ளது போல் தர்பூசணி பழத்திலும் இயற்கையாவே லைகோபீன் எனப்படும் இயற்கை மூலப்பொருள் உள்ளதன் காரணமாகவே சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது.மேலும், மஞ்சள் நிற தர்பூசணி பழத்திற்கு பீட்டா கரோட்டீன் எனப்படும் சுரபி காரணம் ஆகும். இந்த லைகோபீன் மற்றும் பீட்டா கரோட்டீன் நமது கண்பார்வைத் திறனை அதிகரிக்கிறது. தர்பூசணியில் கலப்படம் செய்யப்படுவதாக பரப்பிய தவறான வதந்திகளை நம்ப வேண்டாம். பொதுமக்கள் தர்பூசணியை உண்டு பயனடையலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.