உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விழுப்புரம் பஸ் நிலைய வடிகால் பிரச்னை தீர்க்கப்படுமா?: நிரந்தர திட்டத்தை உருவாக்குவது அவசியம்

விழுப்புரம் பஸ் நிலைய வடிகால் பிரச்னை தீர்க்கப்படுமா?: நிரந்தர திட்டத்தை உருவாக்குவது அவசியம்

விழுப்புரம் விழுப்புரம் புதிய பஸ் நிலைய வளாகத்தில், மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கும் பிரச்னை நீடிக்கிறது. இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்படாததால், நகராட்சி நிர்வாகத்தினர் திணறி வருகின்றனர்.விழுப்புரம் புதிய பஸ் நிலையம், ஒருங்கிணைந்த கோர்ட் வளாகம், கலெக்டர் அலுவலகம் அடங்கிய பெருந்திட்ட வளாகம் பகுதிகளைவிட, 2 அடி பள்ளமாக உள்ளது.இதனால், ஆண்டுதோறும் மழை காலத்தின்போது, புதிய பஸ் நிலைய வளாகத்தில் மழை நீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. இந்த தண்ணீரை வெளியேற்ற முறையான வடிகால் வாய்க்கால் இல்லாமல், நகராட்சி நிர்வாகம் திணறி வருகிறது.விழுப்புரம் நான்குமுனை சந்திப்பில் இருந்து புதிய பஸ் நிலையம் வரை, நெடுஞ்சாலையின் இருபுறமும் உள்ள பிரதான வடிகால் வாய்க்கால்கள் நீண்ட காலமாக துார் வாரப்படாமல் உள்ளது.மேலும், புதிய பஸ் நிலையத்தில் இருந்து, வழுதரெட்டி வரை 750 மீட்டர் துாரத்தில் எதிர்புறத்தில் தேரடி பிள்ளையார் கோவிலில் இருந்து தெய்வானை அம்மாள் மகளிர் கல்லுாரி வரை, நெடுஞ்சாலையோர பிரதான வடிகால் வாய்க்கால் முறையாக அமைக்கப்படவில்லை.இதனால் பஸ் நிலைய வளாகத்தில் மழை நீரை சேகரித்து, ராட்சத குழாய்கள் மூலம் பம்பிங் செய்து, அவ்வப்போது வெளியேற்றப்படுகிறது. இந்த மழை நீர், திருச்சி தேசிய நெடுஞ்சாலையோரம் பாண்டியன் நகரில் உள்ள மருதுார் வாய்க்காலில் வெளியேற்றப்பட்டது.இதுபோன்ற தற்காலிக தீர்வுக்கு மாற்றாக, புதிய பஸ் நிலையத்தில் இருந்து நெடுஞ்சாலையோரம் உள்ள பிரதான வாய்க்காலை துார் வார நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், திருச்சி மார்க்கமாக, விடுபட்ட வடிகால் வாய்க்கால் அமைக்கப்பட வேண்டும்.மேலும், பஸ் நிலைய பகுதியில் இருந்து வி.மருதுார் ஏரிக்கு மழை நீரைக் கொண்டு செல்ல வேண்டுமென கவுன்சிலர்கள் தரப்பில், கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கான சாத்திய கூறுகளை ஆய்வு செய்ய வேண்டும்.சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் இருந்து, வி.மருதுார் ஏரிக்கு மழை நீரை கொண்டு செல்வதற்கு நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, நகராட்சி துறை உள்ளிட்ட துறை அதிகாரிகள் அடங்கிய குழுவை மாவட்ட நிர்வாகம் அமைத்திட வேண்டும்.இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும வகையில், புதிய திட்டத்தை உருவாக்கிட, அமைச்சர் பொன்முடி கவனம் செலுத்த வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

prasanna
டிச 14, 2024 22:38

விழுப்புரம் பஸ் நிலையம் ஏரியில் அமைந்துள்ளது. இது ஒரு தொடர்கதை யாக பஸ் நிலையம் உள்ள வரை நீடிக்கும்


சமீபத்திய செய்தி