பொது சாலையை பயன்படுத்த பணம் கேட்டு மிரட்டல் கலெக்டர் அலுவலகம் முன் தொழிலாளி தர்ணா
விழுப்புரம்: வீட்டிற்கு செல்லும் பொது சாலையை பயன்படுத்த பணம் கேட்டு மிரட்டி வரும் கும்பல் மீது, நடவடிக்கை கோரி கூலித் தொழிலாளி கலெக்டர் அலுவலகம் முன் தர்ணாவில் ஈடுபட்டனர். திருவெண்ணெய் நல்லுார் அருகே பருகம்பட்டைச் சேர்ந்தவர் நாகராஜ், 35; கூலித் தொழிலாளி. இவர், நேற்று மதியம் தனது உறவினர்களுடன் விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தவர், வாசல் முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். அங்கிருந்த போலீசார் சமாதானப்படுத்தி, கலெக்டரிடம் மனு அளிக்குமாறு அனுப்பி வைத்தனர். அவர் அளித்த மனு: எனது பூர்வீக இடத்தில், வீடு கட்டி வசித்து வருகிறேன். எனது வீட்டின் அருகே நத்தம் புறம்போக்கு இடம் உள்ளது. அதன் ஒரு பகுதியில் அரசு சார்பில் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையில் நாங்கள் நடந்து செல்வதற்கும், வீட்டின் கட்டுமான பொருட்களை எடுத்து வருவதற்கும், எங்கள் கிராமத்தில் உள்ள சிலர், எங்களை மிரட்டி 2 லட்சம் ரூபாய் கேட்டு தகராறு செய்தனர். இதுகுறித்து திருவெண்ணெய்நல்லுார் போலீசில் புகார் அளித்தேன். ஆனால், நடவடிக்கை எடுக்கவில்லை. தொடர்ந்து, அவர்கள் வீட்டிற்கு வந்து, இந்த சிமெண்ட் சாலையில் நீங்கள் செல்லக்கூடாது என்று, வீட்டிற்கு செல்லும் வழியை மறித்து கழிவுகளை வீட்டின் முன் கொட்டி தொந்தரவு செய்கின்றனர். இதுகுறித்து, விசாரித்து நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.