வேன் மீது பைக் மோதி விபத்து வாலிபர் பலி; ஒருவர் காயம்
வானுார் : கிளியனுார் அருகே சாலையை கடக்க முயன்ற வேன் மீது, பைக் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்தார். திண்டிவனம் அடுத்த எடையான்குளம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் செங்கேணி மகன் விக்னேஷ், 25; கர்ணாவூர் சீத்தாபுரத்தை சேர்ந்தவர் தர்மேஷ், 22; மற்றும் பாலாஜி, 22; நண்பர்களான இவர்கள் மூவரும், நேற்று காலை புளிச்சப்பள்ளத்திற்கு வேலை விஷயமாக வந்தனர். பின் காலை 9:30 மணிக்கு மூவரும், பைக்கில் புதுச்சேரி-திண்டிவனம் சாலை வழியாக வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தனர். பைக்கை, விக்னேஷ் ஓட்டிச்செல்ல, மற்ற இருவரும் பின்புறமாக அமர்ந்து சென்றனர். ஓமந்துார் சந்திப்பில் சென்றபோது, திடீரென குறுக்கில் சாலையை கடக்க முயன்ற வேன் மீது, பைக் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், விக்னேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தர்மேஷ் பலத்த காயமடைந்தார். பாலாஜி காயமின்றி உயிர் தப்பினார். தகவலறிந்த கிளியனுார் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலத்த காயமடைந்த தர்மேஷ், மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த விபத்து குறித்து செங்கேணி கொடுத்த புகாரின் பேரில் கிளியனுார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.